பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
57


சரி, சாகப்போகிறோம்; நம் பொருளும் நம்மைக் கைவிட்டு விடும்; இனி நாம் என்ன செய்ய வேண்டும்? வாழ்நாளை நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; வீண் படுத்தக் கூடாது. செல்வம் இருக்கும் போதே அறம் செய்ய வேண்டும்; அறச் செயல்களைச் செய்து முடிக்க வேண்டும். ஆயுள் என்பது இறைவன் தந்த வரம்; அதனை நன்கு பயன்படுத்துவதே நாம் மேற்கொள்ளும் தவம்; நாள் காட்டி ஏடுகளை கிழித்துக்கொண்டே போகிறோம்; எஞ்சி நிற்கப் போவது வெறும் அட்டைதான். நாள் அது நம் வாழ்நாளை அறுக்கும் வாள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

உயிருக்கும் உடம்புக்கும் உள்ள உறவு நிலைத்தது அன்று; கூட்டைவிட்டுப் பறவை எப்பொழுது வேண்டு மானாலும் பறந்துவிடும்; அவ்வளவுதான் உயிருக்கும் உடம்புக்கும் உள்ள உறவு. உயிர் போனால் இந்த உடம்பு வெறும் கூடுதான்; அதுவும் சுட்டு எரிக்கப்படுகிறது. விஞ்ஞானிகள் எத்தனையோ கண்டுபிடிப்புகள் செய்து வாழ்வை வாழத் தக்கதாக ஆக்கிவருகிறார்கள்; என்றாலும் உயிர் வாழ்வை அவர்கள் தரமுடிவதில்லை. செத்தவர் செத்தவர்தான்; உடம்பில் உயிரை நிறுத்தி வைக்கும் வித்தையை இதுவரை யாரும் கற்கவில்லை. சாவும் தூக்கம் போன்றதுதான்; தூக்கத்தில் மறுபடியும் எழுகிறோம். இதில் மறுபடியும் விழிப்புக் கிடையாது. வேறுபாடு, இவ்வளவுதான். நிலையான உறக்கமே சாவாகும்; எனினும் அந்த அனுபவத்தை நாளும் அறிந்துவருகிறோம். காலையில் விழிக்கிறோம்; மாலையில் கண் மூடுகிறோம். அவ்வளவுதான் மனிதனின் கதை.