அவர் செவ்விதாகப் படைத்தளித்த நூலே திருக்குறள்; அதனால், தமிழ் இறவாப் புகழ்பெற்றது.
திருக்குறள் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆயின; காலத்தின் இடையீட்டினால், சொற்கள் பல உருமாறின. சில, பொருளால் வேறாயின; அதனால், திருக்குறள் மூலம் மட்டும் படித்து நேர்ப்பொருள் காண்பது அரிதாயிற்று.
நல்லறிஞராகிய அருளாளர் பதின்மர் குறளுக்கு உரை எழுதியதாய் மரபுவழிச் செய்தி ஒன்று உண்டு; அவற்றுள் இன்று கிடைப்பன மிகச் சிலவே; அவற்றுள்ளும் தெற்றெனப் பொருள் புரிந்துகொள்ளக்கூடியன ஒன்றிரண்டே; அதனால், காலந்தொறும் புத்துரைகள் தோன்றிக்கொண்டே வரலாயின.
அவை ‘குறளின் பொருளை எளிதாக்கிக் காட்டுதற்கு மாறாய்த் தாம்தாம் சொல்வதே சரி’ என்று சாதிப்பதையே முதன்மையாய்க்கொண்டு குழப்பத்தை மிகுதியாக்கின.
“குழப்பம் இல்லாமல், தெளிவாய்க் குறைமதியினரும் அறிந்து உய்தல் வேண்டும்” என்னும் கருணையினால், பேராசிரியர் ரா. சீநிவாசன் எனும் பேரறிஞர் குறட்பாக்களைத் தொடாமல், அவை காட்டும் சாரத்தைமட்டும் கோதின்றி வடித்து, எளிய தேன்பாகாய்த் தந்துள்ளார்.
குறள் கற்பதுபோல் தோன்றாமல், ஏதோ இனிய கதை படிப்பது போன்ற உணர்ச்சி தோன்றுமாறு குறளின் சாரம் முழுதையும் சுவைபடத் தந்துள்ளாார்.
இவ் வரிய செயலுக்கு அவ் வருளாளரின் பல்லாண்டு காலப் பயிற்சியும் பயிற்றுவித்த பாங்கும் துணைபுரிந்துள்ளன.
இந் நூல் குறள் அன்று; குறளின் உரையும் அன்று; ஆனால், குறள் முழுதும் பயின்று கடைப்பிடிக்கச் செய்யும் ஊற்றுக்கோல்!