பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
78


ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குவார்; அது முற்றுப் பெற வேண்டிய அனைத்துச் செயல்களையும் விடாமல் செய்ய வேண்டும். செய்யத் தகாத முயற்சிகளைச் செய்தாலும் அது கெட்டுவிடும்; செய்ய வேண்டுவன செய்யாமையாலும் மேற்கொண்ட காரியம் பழுது ஆகிவிடும்.

ஒரு செயலை மேற்கொள்ளுமுன் நன்கு ஆராய்ந்து பின் தொடங்குவது என்று முடிவு செய்ய வேண்டும்; தொடங்கிய பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பது கூடாது. திட்டமில்லாத எதுவும் வெற்றி பெறாது. தீர யோசித்தே ஒரு முடிவுக்கு வரவேண்டும். தொடங்கிவிட்டுப் பிறகு எப்படிச் செய்வது? இதனால் நன்மை உண்டாகுமா? என்று யோசித்துக் கொண்டிருப்பதனால் எந்தப் பயனும் விளையாது. எதனையும் முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும்.

வழிவகை கண்டு தொடங்காத எந்த முயற்சியும் பலர் நின்று உதவினாலும் வெற்றி பெறாது; எடுக்கும் வினை வெற்றி பெறுமா? என்பதை எண்ணிப் பார்த்தே இறங்க வேண்டும்.

மேற்கொள்ளும் செயல் உன்னதமானதாக இருக்கலாம்; மிக நல்லதாகவும் இருக்கலாம்; வருவாய் தருவதாகவும் இருக்கலாம்; அதனை உடனிருந்து செய்பவர் எத்தகையவர் என்பதை ஒட்டியே அதில் வெற்றி அமையும். செய்பவரின் திறமை, பண்பு இவையும் அடிப்படை ஆகும்.

தனக்கு உகந்த தொழிலையே மேற்கொள்ள வேண்டும்; தொடர்பு இல்லாத தொழிலில் இறங்கினால் தோல்வியே ஏற்படும்.