நற்சான்று இதழ் கேட்டுப் பெறுக. அதாவது அவன் நற்குடியில் பிறந்தவனா? அவன் சூழ்நிலை சுற்றுப்புறம் எப்படி? படிப்பும் பட்டமும் ஆராய்க.
பட்டம் பெற்றவனாக இருந்தால் மட்டும் போதாது; தொழில் திறமை இருக்கிறதா? இதனைக் கேட்டு அறியவும்.
குறை இல்லாத மனிதரே இருக்க முடியாது; குணம் குற்றம் இவற்றை ஆராய்க; சிறு குறைகள் இருக்கலாம்; அவற்றைப் பொருட்படுத்தாதே.
“நான் அநாதை; சுற்றம் இல்லாதவன்; அக்குதொக்கு இல்லை” என்றால் பக்கத்திலேயே சேர்க்காதே. அவன் பழிக்கு நாணமாட்டான்; வழிக்கு வரமாட்டான்.
உறவுக்காரன் என்றால் வீட்டோடு வைத்துக் கொள்ளவும்; அலுவலகத்தில் அனுமதிக்காதே. அங்கு அவன் பிறர் வேலைகளில் தலையிடுவான்; வீட்டில் உன் மனைவியிடம் கோள் மூட்டுவான்; அதிகாரம் அனைத்தும் அவன் கையில் கொண்டுவர முனைவான்; மற்றவர்களைப் பற்றிக் கோள் சொல்வான்.
இவ்வளவும் அவனுக்கு வைக்கப்ப்ட்ட தேர்வுகள்: அதற்கப்புறமும் அவனைச் சந்தேகித்துக் கொண்டிருந்தால் நீ உருப்படமாட்டாய். அவன் தொழிலைச் செய்து முடிப்பான்; உன் தலையீடு அடிக்கடி கூடாது. அப்புறம் அவன் சுயமாகச் சிந்தித்துத் தொழில் செய்யமாட்டான்; பொறுப்பைத் தட்டிக் கழித்து உனக்குச் சுமை கொடுப்பான். நீ ஒவ்வொன்றிலும் தலையிட்டால் அந்த ஆள் தேவையே இல்லை.