பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. அமைச்சு நல்ல மந்திரியின் தன்மை. கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. (ப-உ) செய்யும்-செய்ய வேண்டிய, அருவினையும்-அருமை யான காரியம் இன்னது என்பதையும், கருவியும்-அதனைச் செய்தற்கு உதவி செய்யும் (சாதனங்கள்) கருவிகள் இன்ன என்பதையும், காலமும்-செய்தற்குரிய நேரம் இன்னது என்பதையும், செய்கையும்-அதனைச் செய்யும் விதம் இன்னது என்பதையும், மாண்டது-மாட்சிமைப்பட ஆராய வல்லவனே, அமைச்சுநல்ல மந்திரியாவான். . (க-உ) கருவி, காலம், செய்கை, செய்யும்வினை என்னும் நான்கையும் ஆராய வல்லவனே நன்மந்திரி. மாண்டது-எழுவாய் ; அமைச்சு-பயனிலை. 42. வினைத் தூய்மை பரிசுத்தமான காரியங்களைச் செய்தல். ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. (ப-உ) ஈன்றாள்-(ஒருவன்) தன்னைப்பெற்ற தாயினுடைய, பசி-பசியை, காண்பான் ஆயினும்-கண்டு வருந்துகிறான் என்றாலும், (அப்பசியைப் போக்குவதற்காக) சான்றோர்-பெரியோர்கள், பழிக்கும் வினை-கூடாதெனப் பழிக்கும் தீய காரியங்களை, செய்யற்க-செய்யாமல் இருப்பானாக. (க-உ) தாயின் பசியைப் போக்கக் கருதியும், பழிச்செயலைச் செய்யக்கூடாது. ஒருவன்-தோன்றா எழுவாய் ; செய்யற்க-பயனிலை. 27