3. கோலொடு நின்றான்!
வேலொடு நின்றான் இடுவென்றது போலும்
கோலொடு நின்றான் இரவு
என்பது திருக்குறளில் ஒரு குறள்.
கல்வியைப் பற்றிக் கூறிப் பின் கல்லாமையைப் பற்றியும் கூறியதுபோல, வள்ளுவர் செங்கோன்மையைப் பற்றிக் கூறிப் பின் கொடுங்கோன்மையைப் பற்றியும் கூறும் பொழுது, இக் குறளை இரண்டாவதாகக் கூறியுள்ளார்.
இதில், 'கோன்மை' என்பது கோலின் தன்மை என்றாகி, அரசனது முறை செய்யுந் தொழிலைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
கோடாத கோலைச் 'செங்கோல்' என்றும், கோடுங்கோலைக் 'கொடுங்கோல்' என்றுங் குறிப்பிட்டு, மன்னனது நன்முறையையும் வன்முறையையும் விளக்குவது ஒரு தமிழ் மரபாகும்.
மன்னன் கைப்பிடிக்கும் செங்கோலானது வணிகன் கைப் பிடிக்கும் துலாக்கோல் போல் ஒரு பக்கமும் சாயாது நடுவு நிலையில் நிற்க வேண்டும் என்பது தமிழர் நெறி.
தனக்குச் சேரவேண்டிய வரி அல்லாத பிற பொருள்களை மன்னன் மக்களிடத்தில் விரும்பிப் பெறுவது கொடுங்கோன்மை ஆகும் என்பது இக் குறளின் பொருள்.
மன்னன் மக்களிடத்தில் பிற வழிகளில் கேட்டுப் பெறுகின்ற பொருள்களை, 'இரவு' என்று வள்ளுவர் இக் குறளில் குறிப்பிட்டுக் காட்டுவது, அரசர்களது நெஞ்சத்தில் அம்பு கொண்டு எய்வது போன்று இருக்கிறது.
மன்னன் மக்களிடம் கொடுங்கோன்மையாற் பெற்ற செல்வம் எவ்வளவு உயர்ந்ததாக இருப்பினும், அது இரந்து பெற்ற இழிந்த செல்வமேயாகும் என்பது வள்ளுவரது முடிவு.