20
திருக்குறள் புதைபொருள்
இரந்து பெறுகிற இழிகுணம் படைத்த ஒருவனைக் 'கொடுங்கோலன்' எனக் கூறினாலும், அவனை மன்னனாக ஒப்புக்கொண்டதாக ஆகுமாம். ஆகவே, அவனைக் கொடுங்கோலன் எனக் கூற ஒப்பாமல் 'வெறுங்கோலன்' எனக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
உறுப்புக்கள் குறைந்துள்ள குருடும் நொண்டியும் ஊன்றுகோல் கொண்டு நின்று புரியும் இரத்தல் தொழிலை, வெறுங்கோல் கொண்டு நிற்கும் மன்னன் விரும்பிச் செய்வது வெறுப்பிற்கு உரியது என இக் குறள் கூறாமற் கூறுகிறது.
கோலோடு நின்ற மன்னவன் மக்களிடம் பெறும் பொருளை 'இரவு' என்று வள்ளுவர் சொல்லாற் குறிப் பிட்டு, கருத்தால் அதனைக் 'களவு' என்று காட்டுவது எண்ணி மகிழ வேண்டிய ஒன்று.
கோல் கொண்டு நின்ற இத்தகைய மன்னர்களது கொடுஞ்செயலுக்குக் காடுகளில் வேல்கொண்டு நின்று, 'இடு' வென்று கூறி வழிப்பறி செய்யும் கள்வரது கொடுஞ்செயலை இக் குறளில் உவமையாகக் கூறியிருப்பது, நம் உள்ளத்தையெல்லாம் சுடுகிறது.
'வேலொடு நின்றான்' என்ற சொற்களிலிருந்து, கள்வன் அன்பு, அறம் முதலிய எதனொடும் நில்லாமையையும், மன்னன் 'கோலொடு நின்றான்' என்ற சொற்களிலிருந்து அவன் அறிஞர், அமைச்சர் முதலிய வேறு எவரோடும் நில்லாமையையும் புலப்படுத்துவது எண்ணி எண்ணி வியக்கக் கூடியதாகும்.
கொடாவிடில் துன்புறுத்துவோம் என்பதில் மட்டுமல்ல; கொடுப்பதால் நன்மை ஏதும் கிடைக்காது என்பதிலும் வேலொடு நின்ற கள்வனும், கோலொடு நின்ற மன்னனும் செயலொடு ஒத்து நிற்பது உய்த்துணரத்தக்கது.
வேலொடு நின்றவன் முன்பும் கோலொடு நின்றவன் முன்பும் செல்வமொடு நிற்பதைக் காட்டிலும் வறுமையொடு நிற்பது நல்லது என்பது இக்குறளின் திரண்ட கருத்து.