பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, மாண்புமிகு,

ஜஸ்டிஸ் எஸ். மகராஜன் B.Sc., B.L. அவர்களின்

மதிப்புரை

அரை நூற்றாண்டு காலமாக வள்ளுவர் நெறியைத் தமிழகமெங்கும் பரப்பி வந்தவர் இந்நூலாசிரியர். ஆசிரியருடைய குறள் விளக்கப் பேச்சுக்களை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்டுப் பயனடைந்திருக்கிறார்கள்.

கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களுடைய பேச்சுக்களின் கவர்ச்சிக்குக் காரணமாக இருப்பது அவர்களுடைய உருவப் பொலிவு மாத்திரமல்ல. உள்ளத் தெளிவும், ஆர்வத்தோடு பொங்கி எழும் கம்பீரத் தமிழும். அவர்களுடைய பேச்சுக்குக் கவர்ச்சியை யூட்டுகின்றன.

ஒவ்வொரு குறளையும் உண்மையோடும் உணர்ச்சியோடும் ஒட்டி நின்று அனுபவித்து, வாழ்க்கை என்ற உரைகல்லில் குறளை உரைத்துப் பார்த்து, அதன் உட்பொருளை உணர்ந்தவர் கி. ஆ. பெ. வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்பட்ட வளமான அனுபவமும் வள்ளுவர் இதயத்தை புரிந்து கொள்ளுவதற்குத் துணையாக இருந்திருக்கிறது.

மேலும், தாம் வள்ளுவரிடம் கற்ற உண்மைகளை விதம் விதமான உதாரணங்களைக்கொண்டு விளக்கும் வல்லமை பெற்றவர் இவ்வாசிரியர். ஐம்பது ஆண்டுகளாகத் திறக்குறளை விளக்கி விளக்கிப்பெற்ற தெளிவெல்லாம், இந்நூலின் முழுக்க முழுக்க இறங்கியிருக்கிறது.