பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை_பெருஞ்சித்திரனார்

௧௨௧


நன்கு கருதத்தக்கது.

முதற்கண், இந்நூலுள் அவர் தாம் கூறவேண்டிய கருத்துகளை உணர்வு அளவாகவும் உடைமை அளவாகவும் என இரண்டு வகையாகப் பிரித்துச் சொல்வதை நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

அத்துடன், அவர் 'அறம்' என்று கூறுவது முற்றும் பொதுமை . பொது நலம்பொதுவுடைமைக் கூறுகளையே என்பதையும் தெளிவாக நாம் அறிதல் வேண்டும். ஒரே வகையான, ஆனால் சிற்சிறிது கூர்தலுற்ற இம்மூன்று உணர்வுகளையுமேதாம் அவர் அறம் என்று கூறுவார். உணர்வு அளவானும் உடைமையளவானும் ஆங்காங்குத் தேவைக்கேற்ப, பொதுவாகவும் சிறப்பாகவும் கூறப்பெறும் அனைத்துக் கருத்துகளுமே அறந்தான் என்பது அவர் கருத்து. எடுத்துக்காட்டாக, ஒரு சில அறக்கருத்துகளாக அவர் கூறுவனவற்றைக் காண்க

உணர்வு அளவாகக் கூறப்பெறும் அறக்கூறுகள் சில:
1) மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் — 34.
 
2) அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம், – 35,
 
3) அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. — 76.

4) துறந்தாரில் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். – 159.

5) ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு. – 161.

6) மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு - 204

7) வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். – 271

8) பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று - 297.

9) தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம். - 305.