பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௨௦௪

முன்னுரை 


கருத்துகளும், பெண்ணடிமைக் கருத்துகள், ஆனாளுமைக் கருத்துகள் கொண்டிருக்க வில்லை என்பதுடன், அவற்றுக்கு எதிரானவை என்பதும் ஒருவாறு விளக்கப்பெறும் இதுவே இவ்வகையில் தமிழியலையும் விளங்கிக் கொள்ளும் ஒரு முயற்சியுமாகும்.

இஃதிவ்வாறிருக்க இவை, பெண்ணுக்கு இழிவையும் தாழ்வையும் கற்பிக்கின்றன என்று எவ்வாறு தவறாகக் கொள்ளப்பெற்றனவோ, எனில் அஃது உரையாசிரியர் சிலரின் தவறான விளக்கத்தின் பாற்பட்டெழுந்து விளைவாகும் என்க. என்னை?

இத்தலைப்புக்குப் பொருள் கூற வந்த பரிமேலழகர் முதலிய சிலரும் அவர்களையொட்டி, இறுதி நிலையாகப் பாவாணரும், கீழ்வருமாறு ஒரு தவறான விளக்கத்தைத் தந்துள்ளனர். அவை இவையாகும்.

அற்றைப் பரிமேலழகர் தம் தலைப்புரையில் அதாவது, தன் வழி 'ஒழுகற் பாலளாய இல்லாள் வழியே தான் ஒழுகுதல், என்று கூறுவதும் இற்றைப் பாவாணரும் அக்கருத்தை வழிமொழிந்தும், மொழி மொழிந்தும், அஃதாவது, காம வின்பக் கழிபேராசை பற்றி, தனக்கு அடங்கி நடக்க வேண்டிய தன் மனைவிக்குத் தான் அடங்கி நடத்தல்' என்று உரை செய்ததுடன் நில்லாமல், 'ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே' என்று வாழ்வியலுக்குப் பொருந்தாத பெண்ணடிமைப் பழமொழி ஒன்றையும், பொருந்தாமல் எடுத்துக் கூறுவதும், பெண்ணை அடிமை செய்வதும், ஆனாளுமைக் கருத்தை ஊக்குவிப்பதுமான கருத்துரைகளாகும் என்க. இவற்றை இன்னும் சிறிது விளங்கக் கூறுவோம்.

பொதுவாக உயிர்க் கூற்று நிலையில், மக்களிடத்துச் சிலர்க்கு உள்ளத்தின் உணர்வு மிகுதியாக இருக்கும். சிலர்க்கு அறிவுணர்வு மிகுதியாக இருக்கும். இன்னும் சிலர்க்கு உடலுணர்வு மிகுதியாக இருக்கும். உள்ள உணர்வு மிகுதியாக இருப்பவர்கள், அன்பு, பற்று, வெறுப்பு, சினம், பொறாமை, பகை முதலிய உள்ளத்தின் பாற்பட்ட உணர்வு நிலைகளில் மிகுந்து தோன் றுவர். அறிவுணர்வு மிகுதியாக இருப்பவர்கள், அறிவியல், ஆராய்ச்சி, கொள்கை, அரசியல், பொருளியல், மக்களியல் முதலிய அறிவின் பாற்பட்ட அனைத்து நிலைகளிலும் மிகுந்து தோன்றுவர். அதே போல், உடலுணர்வு மிகுதியாக இருப்பவர்கள், வீரம், போராட்டம், போர், விளையாட்டுத் திறன்கள், உடல் துய்ப்பு, பாலியல் முதலிய உணர்வு நிலைகளில் மிகுந்து தோன்றுவர், இந்த மூன்று நிலைகளும் ஒவ்வொருவரிடமும், ஒன்றோ, இரண்டோ, அல்லது மூன்றுமோ.அவரவர் உயிரியல், மரபியல், சூழலியல் கூற்றுப்படி, கலந்தும், ஆனால் வெவ்வேறு அளவுகளில், குறைந்தும் மிகுந்தும் அல்லது சமநிலையிலும் இருக்கும்.