பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

75


செய்ந்நன்றியறிதல் - ஆகிய நான்கு அறவியல் கூறுகளின் உண்மைகளைப் புலப்படுத்தினர்.

இவை, கணவன், மனைவி, பிற நெருங்கிய இல்லறத் தொடர்பாளர்களுக்கும் உரிய குடும்பவியல் பற்றியவை.

- அதனையடுத்து, அவ்வில்லறத்தின் அகப்புறவியல், கூறுகளாக, மூன்றாம் நிலையில், நடுவுநிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறனில் விழையாமை, பொறையுடைமை ஆகிய ஐந்து அறவியல் கூறுகளின் உண்மைகளைப் புலப்படுத்தினார்.

இவை, ஒரு குடும்பத்திற்கும், பிற குடும்பங்களுக்குமான தொடர்புணர்வுகளையும், குமுகாயத் தொடக்கத்தின் பொதுமை அறவுணர்வுகளையும் கொண்டவை.

- இவற்றையடுத்து, அவ்வில்லறத்தின் புறவியல்(External) கூறுகளாக நான்காம் நிலையில், அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினையச்சம் ஆகிய ஐந்து அகவியல் கூறுகளில், முதல் நான்கினையும் புலப்படுத்தி விட்டு, ஐந்தாவதாகிய தீவினையச்சத்தை இவ்வதிகாரத்தின்கண் புலப்படுத்துவார்.

இவை, ஒரு குடும்பத்திற்கும் குமுகாயத்திற்கும் உள்ள பொதுமை அறவுணர்வுகளை மேம்படுத்திக் கூறுபவை.

- இனி இதனையடுத்து, அவ்வில்லறத்தின்,புறப்புறவியல் (Exterior-External) கூறுகளாக, ஐந்தாம் நிலையில், ஒப்புரவறிதல், ஈகை, புகழ் ஆகிய மூன்று அறவியல் உண்மைகளையும் உள்ளடக்கியவை.

இவை, இல்லறவியலின் குமுகாயப் பொதுமைப் பண்புகளையும் பயன்களையும் உள்ளடக்கியவை. அவை, இதனையடுத்து மேலதிகாரங்களில் கூறப்பெறும், என்க.


உ0க. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு. - 201

பொருள்கோள் முறை:

தீவினை என்னும் செருக்கு, தீவினையார்
அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்.

பொழிப்புரை: (மன) ஆணவத்தாலும், (உடல்) திமிராலும் பிறர்க்குத் தீமை செய்வதற்கு, அதிலேயே ஈடுபட்டுப் பழகியவர் அஞ்சமாட்டார். மேன்மையுள்ளம் கொண்டவரோ (பிறர்க்குத் தீமமை செய்ய) அஞ்சுவர்.