50 திருப்பாவை விளக்கம்
நந்தகோபன் திருமாளிகை வாசலுக்கு வந்த சேர்ந்த பெண்கள் அங்கே கோயில் காத்து நிற்பவனையும் வாயில் காத்து நிற்பவனையும் விளித்துப் பேசத் தொடங்குகிறார்கள்.
முதற்கண்,
நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய
கோயில்காப் பானே!
என்று விளிக்கின்றார்கள். பழங்காலத்தில் அரசன் உறையும் அரண்மனை கோயில் என்று வழங்கப்பட்டது. செல்வச் செழிப்பு மிக்கவன் நந்தகோபன், அவன் அனைவருக்கும் தலைவனாய் அமைந்தவன்; வீரம் கொடை அளி, செங்கோல் முதலிய பண்புகளால் அவன் ஆயர்குலத்தார்க்கெல்லாம் போற்றத்தக்க ஒரு தலைவனாய் விளங்குகின்றான். திருமாளிகையின் வெளிப்புற வாயிலைக் காத்து நிற்பவனின் பெயரை அறிந்திருக்கும் வாய்ப்பு இப்பெண்களுக்கு வாய்த்திருக்காத காரணத்தால் அவன் பெயரைச் சொல்லி அழைக்க இயலாமல் அவன் மேற்கொண்டிருக்கும் தொழிலைச்சுட்டியே அவனை அழைக்கின்றார்கள். மேலும் அவன் விசுவாசியாக - தலைவனுக்கு உற்ற உயிர்காக்கும் பண்பு கொண்டவனாக விளங்குபவன் அன்றோ? அவன் தலைவன் புகழ்பாடி அவனை அழைத்தால் அவன் மகிழ்ந்து இவர்கள் கேட்கும் காரியத்தைத் தட்டாமல் முடித்துக் கொடுப்பான் அன்றோ? எனவே எடுத்த எடுப்பிலேயே நந்தகோபன் புகழ் பாடுமுகத்தான் நாயகனாய் நின்ற நந்தகோபன்’ என்கிறார்கள். இப்பொழுது வெளிவாயிலைக் காத்து நிற்கும் காவலாளி கதவைத் திறந்து உள்ளே விட்டுவிட்டான். இனி நந்தகோபன் வாழும் உட்புறத்துள்ளும் நுழைய வேண்டும் அல்லவா? எனவே உட்புறத்து வாயிலைக் காத்து நிற்பவனையும் அவன் பெயர் தெரியாமையினாலே அவன் தொழிலைச் சுட்டி விளிக்கிறார்கள். இவன்