25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
முன்னைய பாசுரத்தில் கண்ணன் திருவாய்ப்பாடிப் பெண்களின் வேண்டுகோளுக்கு மனமிரங்கி, அவர் களுடைய குறையைக்கேட்டு, நிறைவு செய்வதற்காக வந்ததாகக் கருதிக்கொண்டு இப்பாசுரத்தைக் காண்போம்.
இப்பாசுரம், திருவாய்ப்பாடிப் பெண்களின் கிருஷ்ண பக்தியையும், கண்ணனின் பால சரிதத்தில் அவர்கள் நெஞ்சம் தோய்ந்து ஈடுபட்ட பாங்கினையும் ஒருங்கே புலப்படுத்துகின்றது எனலாம். பெரும்பாலும் கண்ணனுடைய பிள்ளைப் பருவத்து நிகழ்ச்சிகளை ஆய்ப்பாடிப் பெண்கள் அழகுற எடுத்து மொழிகின்றார்கள்.
முதலில், கண்ணன் தேவகிக்கும், வசுதேவனுக்கும் மகனாகப் பிறந்து, கம்சனால் கொல்லப்பட்டுவிடுவான் என்பதனால் திருவாய்ப்பாடியில் விடப்பட்டு, யசோதை - நந்தகோபாலன் மகனாய் மறைந்து வளர்ந்த கதையினைக் கூறத் தொடங்குகின்றார்கள்.
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
என்கிறார்கள்.