10 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்
முக்கியந்தான் - இவர் வரையில்! ஆனால் இருவர் கணிப்பும் முடிவும் நேரெதிராக இயங்கின.
தோல்பையைப் பையத் திறந்தார் அவர். ஒரு காகிதத் தாள் துருத்திக் கொண்டு வந்தது. ஏற்கெனவே பார்த்து முடித்த உள்ளடக்கமானதால், மீண்டும் அதைப் படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனாலும் இத்தகைய இயல்பான நியமங்களுக்கு இந்த மனித மனம் எப்போதுமே அமரிக்கையாகத் தலை வணங்கிவிடுமென்று சொல்ல முடிகின்றதா என்ன? ஞானசீலன் அக்கடிதத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தார்; படித்தார். இதைப் படிக்கிற ஒவ்வொரு தரமும் என் மனசு ஏன் இப்படி சந்தோஷப்படுது?. மன உணர்வுகளின் கலக்கமடையாத நினைவுடன் அவரது மனத்தின் மனத்தை வினவினார். கடிதத்தின் அடியிலிருந்த அந்தப் பெயரையும் பல முறை படித்தார். முகத்தில் மலர்ச்சி, எண்ணத்தில் கனவு, கனவில் சிரிப்பு. முன் பின் பார்த்தறியாத பெண்ணின் முகம் சுற்றிவிட்ட பம்பரமாகச் சுற்றியது. கோல மலர் விழிகளும், குழைந்திடும் கொண்டைப் பூச்சரமும், அவரது ரசிப்பு மனத்திற்கு விருந்து வைத்தன போலும்! இந்தப் பெண் யார்? ரிஷிமூலம்-நதிமூலம் காண விழையலாகாது என்பார்கள்! இந்தப் பெண்களின் வியவகாரமும் அங்ஙனம்தானோ?
இருந்திருந்தாற்போல, அங்கே 'ஆபரேஷன் அறை' அமைதி பூத்தது.
'தமிழரசி' அலுவலகத்தின் சொந்தக்காரரான மணிமுத்து வேலாயுதம் துணை ஆசிரியரின் தனி அறைக்குள் பிரவேசித்தார். நாற்காலியில் அமர்ந்து, பத்திரிகையின் நடவடிக்கைகளைப் பற்றி உரையாடினார். காங்கிரஸ் மகாசபையின் எதிர்பார்த்த வெற்றியை