பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 53



“ஆமாம். பின் தெருவிலே பற்றிக் கொண்டது போலிருக்கிறது. நம் வீட்டு வைக்கோல் போரில் பிடித்து வீட்டுக்குள்ளேயும் வந்துவிட்டது. ஐயோ மாளிகை பற்றி எரிகிறதே!” என்று கூச்சலிட்டார்கள் அவர்கள்.

உடனே கார்த்திகேயருக்கு அந்தச் சிறுவன் சொன்னது நினைவுக்கு வந்தது. டெலிபோனில் நெருப்பணைக்கும் படையினரைக் கூப்பிட நினைத்தார். அதற்குள் இரும்புப் பெட்டி நினைவு வந்து விட்டது. உடனே இரும்புப் பெட்டி இருந்த அறையை நோக்கி ஓடினார். ஆனால், அறைக்குள் நுழையப் போகும் சமயம் ‘சடசட’வென்று நெருப்புப் பொறிகள் கிளம்பும் சத்தம் கேட்டது. ‘குபீர், குபீர்’ என்று பயங்கரமாக நெருப்புச் சுடர்கள் பற்றி எரிவது தெரிந்தது. பின்பகுதியின் ஒரு பாகம் மடேர் என்று இடிந்து விழுந்தது. அறைக்குள் நுழைந்தால் உயிருக்கே ஆபத்து என்று நினைத்து மனைவி மக்களுடன் அவரும் வெளியேறிவிட்டார்.

மூன்றாவது தெருவுக்கு ஓடிய சிறுவன் பொது டெலிபோனில் தகவலை அறிவிக்க முயன்றான். அந்த டெலிபோனில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருந்ததால் அது சரியாக வேலை செய்யவில்லை. இதயம் உள்ள மனிதனுக்கே அவசரத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லையே, அது எப்படிப்புரிந்துகொள்ளும்?