404
"மங்கையர்க்கரசி" எனத் தொடங்கும் பதிகமாகும். இப்பதிகத்தின் இரண்டாம் பாடலாகத் திகழ்வது,
வெற்றவே அடியா ரடிமிசை வீழும்
விருப்பினன் வெள்ளை நீ றணியும்
கொற்றவன் றனக்கு மந்திரி யாய
குலச்சிறை குலாவி நின்றேத்தும்
ஒற்றை வெள்விடைய னும்பரார் தலைவன்
உலகினி லியற்கையை ஒழிந்திட்டு
அற்றவர்க் கற்ற சிவனுறைகின்ற
ஆலவா யாவது மிதுவே.
என்பதாகும். இதன் கண் முதலிரண்டடிகளும் மந்திரியார் குலச்சிறையாரின் அடியார் பத்தியினையும் சிவபத்தியினையும் விளக்குவன. பின்னிரண்டடிகளும், திருவாலவாய்த் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனது திருவருளின் நீர்மையைப் புலப்படுத்துவன.
"உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு அற்றவர்க்கு அற்றசிவன்" எனவரும் இத்தொடர், உலகுயிர்களோடு ஒன்றாகியும், வேறாகியும், உடனாகியும் விளங்கும் இறைவனது அத்துவித நிலையைப் புலப்படுத்துவதாகும். இதன்கண் அற்றவர் என்றது, அளவற்ற அன்பின் திறத்தாலே உலகியல் நெறியாகிய பாசவாழ்வினை ஒழித்து, யாவராலும் செய்ய வொண்ணாத செயலைச் செய்து ஆன்மபோதம் அற்றுத் தம்மைச் சிவனருளிலே கொடுத்த மெய்யடியார்களை. அற்றவர்க்கு-பாசப் பிணிப்பினின்றும் நீங்கி இறைவன்பால் முழுதும் தன்னைக் கொடுத்துத் தான் அவனாய்த் தன் செயலற்ற சிவஞானியர்கட்கு. அற்றசிவன்-தான் என்றும், அவர் என்றும் பிரிக்க வொண்ணாத இரண்டற்ற நிலையில் தன் செயலே அவர்கள் செயலாக அவ்வடியார்களோடு