4 திருவருட்டா
பொருள் பச்சை நிறமுடையவள் என்பது பச்சை, நீலம், கருமை இம் மூன்றையும் ஒன்றேபோலப் புலவர்கள் கூறுவது மரபு. ஆகவே இறைவியை நீலி என்றும் கூறுவர். :பிங்கல நீலி செய்யாள் வெளியாள் பசும்பொன் கொடியே’ என்பது அயிராம பட்டர் வாக்கு. நீலி என்பதன் பொருள் கரு நிறத்தோடு கூடியவள் என்பது. நீலி மூலாதாரச் சக்கரத்தில் ஐந்து முகத்தோடு நான்கு இதழ்த் தாமரையில் சாகினி என்ற திருப்பெயருடனும் கரிய நிறத்தோடும் எழுந் தருளி இருப்பள்.
இத்தகைய பெருமைக் குரியள் நம் இறைவி என்று தெரிந்திருந்தும் நம் ஐயா, ஈண்டு நீலி என்னும் திருப் பெயரைக் காளி என்னும் பொருளில் அமைத்து “நீ இறைவன் தோற்றத்தைக் கண்டு அஞ்சவேண்டி இருக்க’ அஞ்சாமல் இருக்கின்றாய் ஆகவே உனக்கு நீலி என்னும் பெயர் தகும் என்னும் குறிப்பில் பிறர் கருதும் போக்கில் ‘நீலி என்பார் நின்னே மெய்யது போலும்” என்றனர். ‘மெய் அது என்பதை, அது மெய்” என்று மாற்றிப் பொருள் காண்க.
நீலி என்னும் சொல்லின் பொருளைக் காளமேகப் புலவர் முருகன் பெருமையைப் பழித்துக் கூறுவது போலப் புகழ்ந்து பாடிய பாட்டில்,
“ அப்பன் இரந்துண்ணி ஆத்தாள் கலநீலி ஒப்பரிய மாமன் உறிதிருடி-சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தானுக்கிங் கெண்ணும் பெருமை இவை’
என்று பாடினர்.
இவ்வாறே விநாயகரைப் பழிப்பது போலப் புகழ்ந்து பாடவந்த அந்தகக்கவி வீரராகவ முதலியாரும்,