துறவற வியல்
அஃகி அகன்ற அறிவென்னாம், யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்?
இ-ள்:- அஃகி அகன்ற அறிவு என் ஆம்-நுண்ணிதாகப் பரந்த அறிவுடையனா யிருத்தலால் யாது பயன் ஆகும், வெஃகி யார் மாட்டும் வெறிய செயின்-பிறர் பொருளை விரும்பி எல்லாரிடத்தும் ஈரமில்லாதன செய்வானாயின்?
[அறிவு என்பது அறிவுடையனாயிருக்கும் தன்மையைக் குறித்து நின்றது. ஈரமில்லாதன-அன்பில்லாத செயல்கள்.]
இஃது, அறிவுடையார் வெஃகுதல் செய்யா ரென்றது. ௩0௨.
இலமென்று வெஃகுதல் செய்யார், புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
இ-ள்:- இலம் என்று வெஃகுதல் செய்யார்-(யாம்) வறியம் என்று பிறர் பொருளை விரும்புதல் செய்யார், புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் -ஐம்புலனையும் வென்ற புன்மை இல்லாத தெளிவை யுடையார்.
[ஐம்புலன்-சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். அவற்றை வெல்லலாவது, அவற்றைப் பற்றி எழும் அவாவினை ஒழித்தல்.]
இது, துறந்தார் வெஃகுதல் செய்யாரென்றது. ௩0௩.
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
இ-ள்:- சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார்-சிற்றின்பத்தை நல்கும் பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார், மற்று இன்பம் வேண்டு பவர்-பேரின்பமாகிய வீடு பேற்றைக் காமிப்பவர்.
௧௧0