பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ஊழியல்.

ஊழியலாவது, ஊழினது இயல்பு. ஊழாவது, முன்பு செய்த வினை பின்பு விளையும் முறை. மேல் கூறிய அறப்பகுதியும், இனிக் கூறுகின்ற பொருட்பகுதியும் இன்பப் பகுதியும் முன் செய்த நல்வினையால் வருதலையும், அவற்றிற்கு மாறான பாவமும் வறுமையும் துன்பமும் தீவினையால் வருதலையும் அறியாதே பல மக்கள் தமது முயற்சியால் வந்ததென்ப. அஃது அன்று என்பதற்காக இது கூறப்பட்டது. ஒருவன் செய்த வினை தனது பயனை வழுவின்றிப் பயத்தல் அறத்தின் ஆகுமாதலான், இஃது அறத்தின் இறுதிக்கண் கூறப் பட்டது.

௩௮-வது.-ஊழ்.

அஃதாவது, ஊழினுடைய தன்மையைக் கூறுதல். (ஊழ் இன்ன தென்பது மேலே உரைக்கப்பட்டது.)

கூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்;
போகூழால் தோன்றும் மடி.

இ-ள்:- கைப்பொருள் ஆகும் ஊழால் அசைவின்மை தோன்றும்-(ஒருவனுக்கு) ஆக்கத்தைக் கொடுக்கின்ற ஊழ் தோற்றினால் முயற்சி தோன்றும்; போகும் ஊழால் மடி தோன்றும்-(ஆக்கத்தின்) அழிவைக் கொடுக்கின்ற ஊழ் தோற்றினால் மடி தோன்றும்.

இஃது, ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் ஏதுவான முயற்சியும் முயலாமையும் ஊழால் வரு மென்றது. ௩௭௧.

௧௩௬