பக்கம்:திருவாசகத்தேன்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

உயிர், வினை செய்தலை நோன்பாகக் கருத வேண்டும். தனக்கென முயல்வது நோன்பல்ல. பிறருக்கென முயல் வதே நோன்பு. உயிர்கள் செய்யும் பணிகள் பெருந்தன் மைக்குச் சான்று அன்று. அவை கடமை. இந்தப் பரந்த உலகில் வாழ்தலுக்குரிய குடிக்கூலியே தொண்டு, சேவை. வினை செய்க! வையகம் பயனுறச் செய்க!

இறைவன் புறத்தே கானும் துணையல்ல. அக நிலைத் துணை; உயிர்க்குயிரதாக நிற்கும் துணை மனத்திற்கே துணை. உயிர், மனம் வழியேதான் எண்ணுகிறது; இயங்குகிறது. வாழ்க்கையின் முதலும் முடிவு மாகிய கருத்தை உருவாக்குவதே மனம். மின்த்துள் நின்ற கருத்தானை' என்பது தேவாரம். மனமே உலகை நோக்குகிறது; செய்திகளைச் சேகரிக்கிறது; தேவைகளை நிர்ணயிக்கிறது; நிர்ணயித்த தேவைகளை அடைய முயற்சி செய்கிறது. உயிர்க்கு மனத்தொடு புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அகநிலைக் கருவிகளும் உண்டு. ஆயினும் மனமே முதல்வாயில்; மனமே முதற்கருவி. மனம் விரும்பினால் புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய கருவிகளையும் பயன்படுத்தலாம். மனம் தனித்து இயங்காது. புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய கருவிகளைப் பயன்படுத்திச் செய்பவை சிறப்பாக அமையும். மனம் மட்டுமே இயங்கினால் செயற்பாட்டில் உணர்ச்சியும் எழுச்சியுமே மிஞ்சும். மனம் மட்டுமே செயல்படும் நிலையில் உள்ள மனிதன் பரபரப்புடையவனாக இருப்பான்; உணர்ச்சி வசப்படுவான்; ஆத்திரப்படுவான்; தீமை செய்து கொள்வான். மனம் வாழ்நிலையின் தொடக்கமாதலால் அந்த மன நிலையிலேயே இறைவன் துணையாக அமைந்து வழிகாட்டுகிறான்; வழி நடத்துகிறான். ஆனால், பலர் அந்த மனத்தின் அறிவுறுத்தலை, மனச் சாட்சியின் குரலை மதிப்பதில்லை, எடுத்துக்கொள்வதில்லை. மனச்சாட்சியின் குரல், ஆன்மாவின் ஆணவ எடுப்பில் எடுபடாமல்