பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


என்று பாடுவதைக் காணலாம். எனவே, முந்தையான காலமென்பது திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்கு முந்தையான காலமென்றே பொருள்கொள்ள வேண்டும்.

முதலடியில் மனம், கர்மேந்திரியங்கள் என்பவற்றோடு கேள்வி, வாக்கு என்று கூறிவிட்டு மறுபடியும் ஐம்புலன்கள் என்று கூறுவதில் ஒரு சிறு குழப்பம் நேரலாம். இங்கே கூறப்பட்ட கேள்வி(செவி, வாக்கு(வாய்) என்பவை ஐம்பொறிகளில் காணப்படும் செவி, வாய் என்பவற்றிலிருந்து வேறுபட்டனவோ என்று நினைக்கத் தோன்றும். உண்மையில் கேள்வி என்று கூறியது எல்லாவற்றையும் கேட்கும் செவியின் தொழிலில், இறைவன் புகழைமட்டும் கேட்கும் பணியைப் பிரித்துக் கூறியதாம். அதேபோல வாக்கும் பயனற்ற பேச்சுக்களைப் பேசுவதை விட்டு இறைவன் புகழைப் பேசுவதைமட்டும் குறிப்பதற்காக விதந்தோதினார் என்க.

அடிகளாருக்கு முன்னர் வாழ்ந்த நாவரசர் பெருமானும் 'செவிகாள் கேண்மின்களோ' (திருமுறை: 4-9-3) என்றும், 'வாயே வாழ்த்துகண்டாய்' (திருமுறை: 4-95) என்றும் கூறியமை இங்கு நோக்கத்தக்கது,

ஐம்பொறிகளிலும் மனத்தின் கட்டுப்பாட்டை மீறித் தொழிற்படும் இயல்பு செவிக்கும் வாய்க்கும் மட்டுமே உண்டு.

84.

 
இருப்பு நெஞ்ச வஞ்சனேனை
     ஆண்டுகொண்ட நின்ன தாள்
கருப்பு மட்டு வாய் மடுத்து
     எனைக் கலந்து போகவும்
நெருப்பும் உண்டு யானும் உண்டிருந்தது
      உண்டு அது ஆயினும்
விருப்பும் உண்டு நின்கண் என்கண்
     என்பது என்ன விச்சையே 80