பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


இப் பாடலில் வரும் 'ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைத்தாங்கு' என்பதற்கும் பலர் பலவாறாகப் பொருள்கூறுவர். காளை மாட்டின் புணர்ச்சியை விரும்புகின்ற பசுமாடு, அந்த நேரங்களில் ஒரு குறிப்பிட்ட ஒசையை உண்டாக்குதலை, தென்பிராந்தியங்களில் ‘மிலைத்தல்’ என்ற சொல்லால் குறிப்பிடுவர். அதாவது காளை மாட்டை எதிரே கண்டவுடன், புணர்ச்சியை வேண்டி நிற்கும் பசு, தன் குறிப்பை அந்தக் காளைக்கு உணர்த்த மிலைத்தலைச் செய்யும். பசுமாடு மிலைத்தாலே எதிரே, எங்கோ ஒரு காளை இருக்கிறது என்பதைக் கிராமத்தில் உள்ளவர்கள் அறிந்து கொள்வர்.

காளை மாட்டைக் கண்டபோதுதான் ஊர்ப் பசு மிலைக்கின்றது. ஆனால், பாவம் குருட்டுப் பசு, எதிரே காளை இருக்கிறது என்பதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும். காளையைக் கண்ட பசுமாடு எங்கோ ஓர் இடத்தில் மிலைக்க, அந்தக் குரலைக் கேட்ட இந்தக் குருட்டுப் பசு, எதிரே காளை இல்லாதபோதும் மிலைக்கின்றது. இந்த அருங்கருத்தைத்தான் அடிகளார் இங்கு உவமையாகப் பயன்படுத்துகிறார்.

இறையருளை முழுமையாகப் பெற்ற அடியார்கள் அவனைக் குருவடிவிலோ வேறு வடிவிலோ கண்டவுடன் அருகில் கண்டதால் தோன்றும் எல்லை மீறிய மகிழ்ச்சி பொங்க அவன் புகழைப் பாடுகின்றனர். காளை இருக்கும் இடந்தெரியாத குருட்டுப் பசு மிலைத்தல்போலத் தாமும் அவன் புகழ் பாடுவதாக அடிகளார் பாடுகிறார்.

குருவானவர் இருக்குமிடம் தெரியாமல் மறைந்த பின்னர்ப் பாடப்பட்டது. ஆதலின் ‘குருட்டு ஆ மிலைத் தாங்கு’ என்று சொல்லிய உவமை முற்றிலும் பொருத்தமாகின்றது.