பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 173


வண்டு பாடும்பொழுது தார ஸ்தாயையிலும் மந்தர ஸ்தாயையிலும் பாடும் இயல்புடையது. எனவே, 'தாரம் பயின்று மந்தம் முரல் வண்டு’ என்றார்.

141.

அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கு
      அஞ்சல் என்னின் அல்லால்
விரை சேர் முடியாய் விடுதி கண்டாய்
      வெள் நகைக் கரும் கண்
திரை சேர் மடந்தை மணந்த
      திருப் பொன் பதப் புயங்கா
வரை சேர்ந்து அடர்ந்து என்ன வல் வினை
      தான் வந்து அடர்வனவே 37


திரைசேர்மடந்தை-அலையோடு கூடிய கங்கை, புயங்கம்-பாம்பு. மணந்த-வணங்கிப்பொருந்திய. அடர்ந்து-நெருக்கி.

‘அரைசே! அறியாச் சிறியேனாகிய என் பிழையை மன்னித்து நீயே அஞ்சேல் என்று சொல்லாவிட்டால் என்னைச் சுற்றியுள்ள அவ்வினைகள் தாமே என்னை வந்து அடர்ந்துவிடும். ஆதலால், என்னை விட்டுவிடாதே’ என்றார்.

142.

அடர் புலனால் நின் பிரிந்து அஞ்சி
       அம் சொல் நல்லார் அவர் தம்
விடர் விடலேனை விடுதி கண்டாய்
       விரிந்தே எரியும்
சுடர் அனையாய் சுடுகாட்டு அரசே
       தொழும்பர்க்கு அமுதே
தொடர்வு அரியாய் தமியேன் தனி நீக்கும்
       தனித் துணையே 38

நல்லார்-மகளிர். விடர்-பிளவு.