பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/212

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


புறத்தே நின்றவர்கள் இவ்வாறு பேச, உறக்கத்திலிருந்து விழித்தவள் இதோ பேசுகிறாள். 'தோழிகளே! பகலிலும் இரவிலும் நாம் கூடியிருக்கும்போது இவ்வாறு விளையாட்டாக ஒருவரை ஒருவர் ஏசிக் கொள்ளுதல் முறையாகும். இந்த விடியற்காலை நேரத்தில், இறைவனை உன்னி வழிபடவேண்டிய நேரத்தில் இப்படி விளையாட்டுப் பேச்சுப் பேசலாமா? அதுவும் வீட்டின் முகப்பில் நின்றுகொண்டு இவ்வாறு விளையாடுவது முறையன்று’ என்கிறாள்.

'ஏசும் இடம் ஈதோ’ என்பதில் ஒரு குறிப்புப் பொருளும் உண்டு. நம் முன்னோர் வீட்டை அகம் என்றும் வீட்டிற்கு வெளியேயுள்ள பகுதியைப் புறம் என்றும் கூறினர். புறப்பகுதியிலிருந்து அகப்பகுதிக்கு நுழையும்போது வாயிற்படியைக் கடக்க நேரிடுகின்றது. புறத்தேயுள்ள பல்வேறு தொல்லைகளைத் தாங்கிநிற்கும் மனம், அகத்தே சென்றவுடன் அமைதி அடைகின்றது. எனவே, வாயிற்படி இரண்டு உலகங்களைப் பிரிக்கினற ஓர் இடமாகும். இன்றும்கூட வாயிற்படியில் அமர்ந்துகொண்டு வெட்டிப் பேச்சு அல்லது வேடிக்கைப் பேச்சு பேசுபவர்களை வீட்டிலுள்ள முதியோர் ஏசுவர். ‘வாயிற்படியில் அமர்ந்துகொண்டு விளையாடாதே; வீண்பேச்சுப் பேசாதே’ என்று கூறுவர். இவற்றையெல்லாம் உள்ளடக்கித்தான் வாயிற்படியில் நிற்கும் பெண்களைப் பார்த்து 'விளையாடி ஏசும் இடம் ஈதோ’ என்று கேட்கிறாள்.

புறத்தே நின்றவர்கள் தாங்கள்தாம் பக்தி மார்க்கத்தில் செல்பவர்கள் என்றும், உறங்குபவள் அவ்வழி வாராதவள் என்றும் பொருள்படப் பேசினர். உள்ளே இருப்பவள் இவர்களுக்குச் சற்றும் குறைந்தவள் அல்லள் என்பதை அவள் பேசும் பேச்சு வெளிப்படுத்துகின்றது.