பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/322

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை * 311


அந்த இன்னருள் இரு வகைகளில் அடிகளாருக்கு அருள் செய்தது.

முதலாவது, கற்பனைக்கும் எட்டாத இறையனுபவத்தில் முழுவதுமாக மூழ்கி, தம்மை மறந்த நிலையில், அந்த அனுபவத்தில் ஒன்றிப்போகுமாறு செய்தமை ஆகும்.

இரண்டாவது, ஒளி வடிவான அவன் அந்த ஒளிவடிவோடே உள்ளத்தில் புகுந்தான். அங்கேயே ஒளி வடிவுடன் நின்றுவிட்டான். அதன் பயனாக உள்ளே உள்ள அஞ்ஞானமாகிய இருள் அகன்றது; மெய்ஞ்ஞானம் பிறந்தது.

இவை இரண்டும் நிகழ்ந்தது தம் தகுதியால் அன்று; தம் எளிமைக்கு இரங்கிக் கருணைகொண்டு அவன் அளித்ததனாலேயே என்கிறார் அடிகளார்.

193.
முன்னானை மூவர்க்கும் முற்றும் ஆய் முற்றுக்கும்
பின்னனைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின்
மன்னானை வானவனை மாது இயலும் பாதியனைத்
தென் ஆனைக்காவானைத் தென் பாண்டி நாட்டானை
என்னானை என் அப்பன் என்பார்கட்கு இன் அமுதை
அன்னானை அம்மானைப் பாடுதும் காண் அம்மானாய் 19

முற்றுக்கும்-அனைத்துப்பொருள்கட்கும். பிஞ்ஞகன்-பிஞ்ளும் என்று சொல்லப்படும் ஒருவகைச் சடையை உடையவன்.

பிரமன், மால், உருத்திரன் என்ற ஆதி தேவர்கள் மூவர்க்கும் அப்பாற்பட்டு நிற்கும் அநாதி தேவனாய் உள்ளவன். அவர்களுக்கு அப்பாற்பட்டு நிற்பவன் என்பதை 'முற்றுமாய்' என்றார். அவர்களும் சர்வ சங்கார காலத்தில் அவனுள் அடங்குவர் ஆதலின் 'மூவர்க்கும் முற்றுமாய்’ என்றார்.