பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/342

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 331


மனத்தில் தோன்றும் எண்ணம் ஒரு வேளை இதைச் செய்திருக்குமோ என்றால், எண்ணங்களுக்கு இவ்வளவு ஆற்றல் இல்லை. எனவே, இச்செயல்களுக்குக் காரணம் எண்ணமோ, அறிவோ, மூளையோ இல்லை என்பது தெளிவு. இச்செயல்களுக்கு மூலகாரணம் என்பது எது என்று சிந்திக்கத் தொடங்கினால் ஓர் உண்மை விளங்கும். அறிவு, எண்ணம் என்பவற்றை எல்லாம் கடந்து சித்தத்தின் ஆழத்தில் தோன்றும் உணர்வே, உடம்பில் காணப்படும் வேறுபாடுகளின் காரணம் என்று அறிந்துகொள்ள முடிகிறது. உணர்வினால்மட்டுமே இவற்றைச் செய்ய முடியும். அந்த உணர்வு எதைப் பற்றிக்கொண்டு தோன்றிற்று? மெய்ம்மைப்பொருள் அல்லது சத்தியப் பொருள் சித்தத்தின் அடிப்பகுதியில் புகுந்தவுடன் அறிவு முதலியவை தொழிற்பாட்டை இழக்கின்றன. அம் மெய்ப்பொருளால் ஏற்பட்ட உணர்வாகிய அனுபவம் சித்தத்தை நிறைத்து, மனத்தின் செயற்பாட்டை ஒழித்து, புத்தியை மடக்கி, அகங்காரத்தையும் செயல் இழக்குமாறு செய்கிறது. மயங்கிய நிலையில், சித்தம் தொழிற்படாமல் நிற்கும்போது ஒருவன் செய்யும் செயல்களைப் பைத்தியத்தின் செயல்கள் என்று கூறுகிறோம். ஆனாலும், புத்தியும் ஆணவமும் செயலிழந்து நிற்க, சித்தத்தில் தோன்றிய உணர்வு, அந்தக்கரணங்கள் நான்கையும் மூடி, முழுவதும் உணர்வுமயமாகி நிரம்பிய நிலையில், உள்ளே நிகழும் நிகழ்ச்சி புற உடலைத் தாக்குகிறது. இந்த உணர்வின் தாக்கத்தால் உடம்பு முழுவதும் நடுங்குகிறது; நாக் குழறுகிறது; வியர்வு பொடிக்கின்றது; கண்ணீர் பெருகுகின்றது.

புறத்தே நிகழும் இச்செயல்பாட்டை முதற்பாடல் தெரிவிக்கின்றது. ஆதலின், முன்னோர் இதனை மெய்யுணர்தல் என்ற தலைப்பில் கொண்டுவந்தனர்.