பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40 * திருவாசகம் – சில சிந்தனைகள் – 2



ஒரு பொருளைச் சுட்டுதல் என்பது ஒருவருடைய அறிவின் துணை கொண்டு செய்யப்பெறுவதாகும். அறிவின் துணையால் செய்யப்பெறும் எந்தச் செயலுக்கும் அடிப்படையில் ‘நான்’ என்பது நின்றே தீரும் அறிவின் அடிப்படையில் நிற்பதே ‘நான்’ தான். பிரபஞ்சத்தையோ அதிலுள்ள பொருள்களையோ கடந்து நிற்கின்ற இறைவனைச் சுட்டிக் கூறத்தொடங்கினால் சில அடிப்படைகள் வெளிப்பட்டே தீரும். சுட்டுபவனாகிய நான், சுட்டப்படுவதாகிய பொருள், சுட்டுகின்றதாகிய செயல் என்ற மூன்றும் அங்கு இடம்பெறும். சுட்டு அறுபட வேண்டுமேயானால் அதற்கு மூலமாகிய ‘நான்’ அறுபட வேண்டும். ‘நான்’ அற்றுவிட்டால் அறிவால் செயற்படும் சுட்டும் அறுபட்டுப் போய்விடும். ‘நான்’ இருக்கின்றவரை அறிவு உண்டு; அறிவிருக்கின்றவரை ‘நான்’ உண்டு. இங்குச் சுட்டறுத்தல் என்று பெரியோர் கூறியது சுட்டுக்கு மூலமாகிய ‘நானை’ யும் அதன் விளைவாகிய அறிவையும் அறுப்பதாகும். இதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. உணர்வு உலகத்தில் ‘நானு’ம் இல்லை; அதன் விளைவாகிய அறிவுமில்லை. இவை இரண்டும் இன்மையால் சுட்டுதலாகிய செயலும் இல்லை. சுட்டறுத்தல் என்பதற்கு உணர்வு உலகில் மூழ்கி விடுதல்’ என்று பொருள் கூறலாமோ என்று தோன்றுகிறது.


25.

வெள்ளம் தாழ் விரி சடையாய் விடையாய் விண்ணோர்
         பெருமானே எனக் கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
    பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேலாகப்
         பதைத்து உருகும் அவர் நிற்க என்னை ஆண்டாய்க்கு
    உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
         உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா
    வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம்
         கண் இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே
21