திருச்சதகம் * 43
போது-வா. வினைக்கேடன்-வினையை நீக்குபவன். ஆவிசோரேன்-உயிர்த்தன்மையை வற்றச்செய்கிலேன். முனைவன்-வினையின்நீங்கி விளங்கிய அறிவன்.
சராசரி மனிதர்கள் வினையில் கட்டுண்டு கிடப்பதைப்போல அமைச்சர் பதவியில் இருந்தபோது தாமும் வினையிலே கட்டுண்டு கிடந்ததாகக் கூறுகிறார் அடிகளார்.
எதிர்பாராத திருப்பெருந்துறை நிகழ்ச்சியில் மிகச் சிறப்புடைய இரண்டு செயல்கள் நடைபெற்றன. குருவாக இருந்தவர், வாய் திறக்கவில்லை என்றாலும் அவருடைய திருவடி சம்பந்தம் பெற்றவுடன் இரண்டு உண்மைகளை அடிகளார் உணர்கின்றார். ஒன்று - தாம் இதுவரை தாங்கியிருந்த வினைகளை, குருவடிவிலுள்ள அந்தப் பெருமான் ஒரே விநாடியில் போக்கக்கூடியவர் என்பதை அடிகளார் உணர்ந்தது. இரண்டு - உணரச் செய்த செயலின் மூலமே அந்தக் குரு தாம் யாரென்பதை அடிகளாருக்கு உணர்த்தியது.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் குருவோ, அடிகளாரோ வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.
இக்கருத்தையே, வினையிலே கிடந்த எனக்கு நீ வினைக்கேடன் என்பதையும், நீ இன்னார் என்பதையும் என்னுள் புகுந்து நின்று அறிவித்தாய் என்று இப்பாடலில் அடிகளார் கூறுகின்றார்.
புகுந்து நின்று அறிவித்தார் என்றதால் இருவரிடையே உரையாடல் இன்மை அறிக.