பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


சூலை நோயால் அவதியுற்று 'ஆற்றேன் அடியேன்' என்று திருவதிகையில் பாடிய நாவரசர் பெருமான் இறையருள் கிட்டிய பின்னர் அதே திருவதிகையில் பல்லவனின் பணியாளர்களைப் பார்த்து, நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம் என்று அடிகளாருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர்ப் பாடியது நினைவு கூரத்தக்கது.

ஆத்தும சுத்தி

இனி வரும் பத்துப் பாடல்களுக்கும் ஆத்தும சுத்தி என்று முன்னோர் தலைப்பிட்டுள்ளனர். இந்தப் பத்துப் பாடல்களையும் படிக்கும்போது இரண்டு கருத்துக்கள் இங்கு முக்கியமாகப் பேசப்பெறுதலைக் காணலாம்.

‘ஆடுகின்றிலை' முதல் அடுத்துவரும் ஐந்து பாடல்களும் தம்முடைய மனத்தை நோக்கி, 'நீ இன்னின்னது செய்திருக்க வேண்டும்; அவற்றைச் செய்யாமல் இருக்கின்றாய்' என்று கண்டிப்பதுபோல அமைந்துள்ளன.

எஞ்சியுள்ள பாடல்களில், வழியோடு சென்ற தம்மைப் பிடித்து இழுத்து இன்னருள் புரிந்தவரைப் பற்றிக்கொண்டு அவர் பின் செல்லாமல் தங்கிவிட்டதற்கு வருந்தி, 'தீயில் வீழ்கிலேன், திண்வரை உருள்கிலேன், ஊனை யான் இன்னும் இருந்து ஓம்புகின்றேன்’ என்று பாடியுள்ளார்.

இந்த நிலையில் இப்பகுதிக்கு ஆத்தும சுத்தி என்ற தலைப்பு எவ்வாறு பொருந்தும் என்பது விளங்கவில்லை.

35.

ஆடுகின்றிலை கூத்துஉடையான் கழற்கு
     அன்பு இலை என்பு உருகிப்
பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை
     பணிகிலை பாத மலர்