பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 57


பந்தனை அறுபட்டமையின் பிறிவிலாத இன்னருள் கை கூடிற்று என்க. (பிறிவு-பிரிவு).

மிகமிக அரிதில் கிடைக்கக்கூடிய இன்னருளைப் பெற்றாகிவிட்டது; பந்தனை அறுபட்டுவிட்டது; புகுந்து ஆண்ட அவர் மெய்யறிவைத் தந்ததோடு அல்லாமல் மேல் செல்ல வேண்டிய நெறிகளையும் புலப்படுத்தி விட்டார். இத்தனை இருந்தும் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறாமல் அவமே கிடத்தலின் ‘பிண நெஞ்சே’ என்றார்.

‘செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு’ என்பது இந்நாட்டுப் பழமொழி இறந்தவன் கையிலுள்ள வெற்றிலை பாக்கு அவனுக்கு எப்பயனையும் தாராமல் பொருள் மாத்திரையாக நின்றுவிட்டதுபோல் குருநாதர் தந்த மெய்யறிவு, புலப்படுத்தப்பெற்ற நெறிகள், பந்தம் அறுபட்ட நிலை, அவருடைய இன்னருள் ஆகிய அனைத்தும் நெஞ்சைப் பொறுத்தவரையில் செத்தவன் கை வெற்றிலை பாக்காக அப்படியே இருந்துவிட்டமையின் பிண நெஞ்சே என்றார் அடிகளார்.

புகைவண்டியில் பின்னருள்ள பெட்டிகளை இழுத்துச் செல்லும் என்ஜின்போன்று உள்ளது நெஞ்சம். அடிகளாரின் மனம், மொழி, மெய் என்ற மூன்றையும் நன்னெறிக்கண் இழுத்துச்செல்லவேண்டிய கடப்பாடு உடையது நெஞ்சம்.

பழுதுபட்ட என்ஜினை நம்பிப் புறப்பட்ட பெட்டிகள், போகவேண்டிய இடம் செல்ல முடியாமல் நடுவழியில் நிற்பதுபோல், அடிகளாரை அழைத்துச் செல்லவேண்டிய நெஞ்சு பிணமாகிவிட்டமையின் ‘கெடுத்தாய் என்னை’ என்று தம் நெஞ்சைக் கூறுகிறார் அடிகளார்.