பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 71



நாம, ரூபம் கடந்து நிற்பது என்பதே இறைவனுக்குச் சொல்லப்படும் இலக்கணமாகும். அப்படி நாம, ரூபம் கடந்த பொருளைப் பொறி, புலன்களால் காண்பது இயலாத காரியம். அவ்வாறானால், கருத்தளவையின் மூலமாகவாவது காண முடியுமா என்றால், அது கருத்திற்கும் அப்பாற்பட்ட பொருளாகும் என்று கூறியுள்ளனர் பெரியோர் காட்சி அளவையின் மூலமோ கருத்து அளவையின் மூலமோ இறைவனை 'அறிதல்’ இயலாத காரியம். எனவே, அடிகளார் 'உணர்வார்' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அப்பொருள் உண்டு என்றால், காட்சியளவையிலும், கருத்தளவையிலும் பட்டுத் தானே தீரவேண்டும் என்ற எண்ணம் தோன்றுமன்றே? அதனைப் போக்குதற்கு, உண்டு என்று அறிவார் என்றோ கண்டார் என்றோ தெரிவார் என்றோ கூறாமல் ‘உணர்வார்க்கு எலாம்’ என்று கூறினார்.

உணரப்படும் பொருள் அனுபவிக்கப்படுமே தவிர அதனை அறிவு கொண்டு ஆராய்தல் கடினம். உண்டு என்று உணர்ந்தவர்கள் அதனை அனுபவிப்பதை விட்டுவிட்டு, ‘அனுபவப்பொருளாக நிற்கும் இது, ஆணோ, பெண்ணோ, அலியோ’ என்று ஆராயத் தொடங்கினால் அது பயனற்ற முயற்சியாகும்.

அனுபவிக்கும் பொருளை ஏன் ஆராயக்கூடாது என்று ஒரு வினாவை எழுப்பினால் இதன் விடையை எளிதில் புரிந்து கொள்ளலாம். அனுபவிப்பது என்பது அகமனம், ஆழ்மனம் ஆகியவற்றின் தொழிலாகும். அனுபவ நிலையின் தொடக்கத்தில், தான் என்ற ஒரு பொருளும் அனுபவம் என்ற ஒரு பொருளும் நெருங்கி வந்து, இறுதியில் 'தான்’ அனுபவத்துள் புகுந்துவிடும். அங்கே அனுபவிப்பவன், அனுபவிக்கப்படும் பொருள் என்ற இரண்டும் அனுபவத்தினுள் இணைந்துவிடும். அந்த அனுபவம் உணர்வின்பாற்பட்டதாகும்.