இந்திரன் பழி தீர்த்த படலம்
23
இந்திரன் மறுபடியும் அமராவதி சேர்ந்தான்; ஆசிரியரிடம் தன் தவற்றை மன்னிக்கும்படி வேண்டி அவர் ஆசி பெற்றுத் திருந்தியவனாகத் தேவர் உலகத்தை ஆண்டு வந்தான். ஆண்டுக்கொருமுறை சித்திரைத் திங்களில் சித்திரை நிலவில் இங்கு வந்து பூஜித்துச் சென்றான். இந்திரன் வழிபட்ட ஆலயம் என்பதால் அத்தலம் பெருமை பெற்றது. மக்கள் திரள் திரளாக வருவதற்கு இந்நிகழ்ச்சியும் ஒரு காரணம் ஆகியது.
ஆசிரியனை மதிக்காமல் அவதிப்பட்ட இந்திரன் மறுபடியும் ஒரு தவறு செய்து விட்டான். அசுரர்களை வென்று வெற்றி வாகை சூடி நகரில் சுற்றி உலாவந்த போது செல்வச் சிறப்பு மிக்க தேவர்கள் தந்த கையுறைகளை ஆர்வத்தோடு பெற்று அவர்களைக் கவுரவித்தான். அவனுக்காகத் துர்வாச முனிவர் தந்த தாமரை மலரை உதாசீனம் செய்தான்; அதனால் அவன் பெற்ற சாபங்கள் இரண்டு. ஒன்று அவன் தலைமுடி பாண்டியன் ஒருவனால் சிதற வேண்டும் என்பது; மற்றொன்று அவன் ஊர்ந்து சென்ற வெள்ளையானை மண்ணுலகில் சென்று காட்டு யானையாக உழல வேண்டும் என்பது இரண்டாவதே இந்தக் கதை.
துர்வாச முனிவர் சிவலிங்கத்தை வழிபட்டுப் பூசனை செய்து அர்ச்சனை செய்து கொண்டிருந்த போது சிவன் சூடியிருந்த தாமரை மலர் ஒன்று விண்ணில் இருந்து விழுந்து அவர் கரத்தில் தங்கியது; இறைவன் தந்த மலரை நிறை மகிழ்வோடு எடுத்துக் கொண்டு வானவர் நகருக்குச் சென்றார். இந்திரனை வாழ்த்த வேண்டும்