பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

திருவிளையாடற்புராணம்

தருபோன்ற தெய்வ மரங்கள் விரும்பும் உணவை அள்ளித் தருகின்றன. தமிழகம் செல்வத்துக்கும் சோற்றுக்கும்பெயர் போனது. உன் சமையல்காரர்கள் மகாமேதாவிகள். உன் செல்வத்தைக் காட்டச் செருக்கோடு செய்த உணவு உண்ண ஆட்கள் இல்லை என்று குறைப்படுகிறாய் எம்முடைய ஆட்கள் வந்தால் உன்னால் சோறு போட முடியாது; ஒரு ஆளுக்குக் கூட உங்களால் வயிறு நிறையச் சோறுபோட முடியாது. அதனால்தான் எம் சிவகணங்களை அழைத்து வரவில்லை. அவர்களுக்கெல்லாம் சோறு போட்டுக் கட்டுப்படி ஆகாது" என்று பேசத் தொடங்கினார்.

"என்னது; அப்படிச் சொல்லிவிட்டீர், எத்தனை ஆட்கள் வேண்டுமானாலும் வரட்டும்; எங்களால் சமாளிக்கமுடியும்" என்றாள்.

சிவன் கிளறி விட்டதால் குண்டோதரன் வயிறு மண்டி எரிந்தது; அகோரப் பசி எடுத்தது; எரிமலை வழிதவறி வயிற்றுக்குள் புகுந்து விட்டது போலப் பசியால் வெந்து வேதனைப்பட்டான். சோற்று மலையினை அவன் அழித்துச் சேற்றுநிலம் ஆக்கினான்; கறி காய், இனிப்புகள். பருப்பு வகைகள், சாம்பார், ரசம், குழம்பு, பாயசம் எல்லாவற்றையும் ஒரு பிடி பிடித்தான். அவன் பசியை அவ்வளவும் சேர்ந்து கால் வயிறு கூட அடக்கவில்லை; நீர் வேட்கையால் மோர் கேட்டான்; எல்லாம் தீர்ந்து விட்டது என்றனர். என்ன செய்வது! பிராட்டியார் இப்படியும் ஒரு ஆள் இருப்பானா என்று வியந்தார்.

இராமாயணத்தில் கும்பகருணன் வண்டி வண்டியாகச் சோறும் ஊனும் கள்ளும் அயின்றான் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். அவனை வெல்லக்கூடிய நிலையில் இவன் இருந்தது அவளுக்கு அதிசயமாக இருந்தது