148 இ. அ.ச. ஞானசம்பந்தன்
கொள்ளாதவர்களே வெற்றி பெறுவர் என்ற நம்பிக்கை திடமாக ஊன்றிவிட்டுள்ளது. அரசியல் தந்திரம் என்ற சிறப்புப் பெயர் சூட்டப்பட்டவுடன் எத்தகைய தவறான வழிகளும் தவறில்லாதவை என்று கருத இடம் ஏற்படுகிறது. ஆனால், தனி மனிதன் வாழ்க்கையாயினும் சரி, ஒரு நாட்டின் முன்னேற்றமாயினும் சரி தவறான வழிகளில் சென்றால் நற்பயன் அடைய முடியாது. என்றும் பயன் கிடைப்பதுபோலக் காணப்பெறினும் அப்பயன் நிலைத்து நில்லாததுடன் முன்னரே இருந்த ஒன்றிரண்டு நன்மைகளையும் சேர்த்து அடித்துக்கொண்டு போய்விடும் என்றும் நம்மவர்கள் கருதினர்.
“சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல்பசுமட் கலத்துள் நீர்பெய்துஇரீஇ யற்று”
என்று குறள் பேசுகிறது. இதன் அடிப்படையை உணர்ந்து தம் வாழ்வை அமைத்துக்கொண்ட திரு.வி.க. அவர்கள் பயனைக் காட்டிலும் அப் பயனை யடையும் வழியில் அதிக கவனம் செலுத்தினார். அதனாற்றான் அடிகளின் சாத்வீக சத்யாக்கிரகத்தை ஏற்றுக்கொண்டாரே தவிர அதன் எதிரான வன்முறைப் புரட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை.
கொள்கையும் செயலும்
ஒழுங்கு முறை, கட்டுப்பாடு என்பவற்றிற்கு அதிக வணக்கஞ் செலுத்திக் கட்டுரைகள் வரைந்த திரு.வி.க. போன்ற சமரச ஞானிகள் அரசினரின் சட்டத்தை வேண்டு மென்றே மீறுகின்ற ஒத்துழையாமையில் பங்கு பெறலாமா என்ற வினா நியாயமானதே. இதற்கு விடை இறுக்கும் முறையில் திரு.வி.க.பின் வருமாறு எழுதுகிறார்:
திருக்குறள், 660. ! தமிழ்ச் சோலை-2, பக்கம் 141 முதல் 143 வரை.