192 இ. அ.ச. ஞானசம்பந்தன்
இம்மாதிரி எழுதுவதில் தனிச் சிறப்பு யாது என்று வினவலாம். இதனைக் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை விளங்கும். இந்திய நாட்டைப் பொறுத்தவரை இரு வேறு மொழிகளில் இரண்டு பெருமக்கள் இத்தகைய சிறிய சொற்றொடர் முறையைக் கையாண்டனர். ஒருவர் மகாத்மா காந்தி; மற்றொருவர் திரு.வி.க. முன்னையவர் ஆங்கிலத்திலும் பின்னையவர் தமிழிலும் இந் நடையை மேற்கொண்டனர். பேச்சின் தனிமுறை
இந்த நடைக்குரிய தனிச்சிறப்பு யாதெனில், இந்த ஒருவகை நடையில்தான் எழுத்து வழக்கும் பேச்சு வழக்கும் ஒன்றாய் அமைய முடியும். நீண்ட வாக்கியங்களால் பேசுவோர் அதிகம் உள்ளனர். இந்த நீண்ட சொற்றொ டர்கள் பிழையில்லாமல் பேசப்பெறலாம். ஆனால், அவற்றை எழுத்தில் வாங்கிப் பார்த்தால் அப்பொழுதுதான் உண்மை விளங்கும். எழுத்து வடிவம் பெறும்பொழுது அந்தத் தொடரில் உயிரில்லாமற் போய்விடும். பேச்சு வழக்கில் பேசுபவருடைய உணர்ச்சி, ஓசை வேறுபாட்டில், முகபாவ வழியில், அங்க அசைவு முறையில், வெளிப்பட்டு அச் சொற்றொடருக்கு உயிர் ஊட்டுகிறது. ஆனால், அதே தொடர் எழுத்தில் வடிக்கப் பெறும்பொழுது உயிரற்று விடுகிறது. - நடை வளர்ச்சி
எனவே, சாதாரண மக்களைப் பொறுத்தமட்டில் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு என்ற இரு பகுப்புகள் உண்டு. பழைய காலத்திலும் இதனை ஏற்றுக்கொண்டு நூல் வழக்கு, உலக பேச்சு வழக்கு எனப் பெயரிட்டனர். இவை இரண்டையும் ஒன்றாக்கும் ஆற்றல் நான் கண்டவரையில் திரு.வி.க. ஒருவருக்கே இருந்தது. அவருடைய பத்திரிகைத் தொழிலும், மேடைப் பேச்சும் ஒன்றை ஒன்று பின்னிக் கிடந்தமையின் இம் முறையைப் பின்பற்ற வேண்டியதாயிற்று.