பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

எனத் தில்லைத் திருக்கூத்தினைப் பரவிப் போற்றுகின்றார். இத்திருப்பாடலும் இதனையடுத்துவரும் கற்பனை கடந்த. சோதி என்ற முதற்குறிப்புடைய திருப்பாடலும் எல்லாம் வல்ல இறைவனது உண்மையிலக்கணத்தினையும், அம்முதல்வன் மன்னுயிர்கள் உய்திபெறத் தில்லைத் திருவளர் திருச்சிற்றம்பலத்தில் நிகழ்த்தியருளும் அற்புதத்திருக்கூத்தின் நுட்பத்தினையும் நன்கு புலப்படுத்துவனவாகும்.

தில்லைநகர் சிறப்புடைத்தாகத் திருமுடிசூடிய இரண்டாங் குலோத்துங்க சோழமன்னன் காலத்தில் வாழ்ந்த அருண் மொழித் தேவர், தம்காலத்து மருதத்தண்பணையும் தாமரை மலர்ந்த ஓடையும் திருநந்தவனமும் சோலைகளும் மதிலும் புறத்தே சூழப்பெற்று, எழுநிலைக் கோபுரங்களையுடையதாய் அழகிய திருவீதியினைப் பெற்று விளங்கிய தில்லைமா நகரின் எழில் நிலத்தினைத் தடுத்தாட்கொண்ட புராணத்திலும் திருநாவுக்கரசு நாயனார் புராணத்திலும் திருஞானசம்பந்தர் புராணத்திலும் சொல்லோவியஞ்செய்து காட்டியுள்ளார். 'நம்பியாரூரர் வடதிசை வாயிலாகவும், திருநாவுக்கரசர் மேற்றிசைவாயிலாக வும், ஆளுடைய பிள்ளையார் தென் திசைவாயிலாகவும் தில்லைப்பதியையடைந்த வழியமைப்பினைச் சேக்கிழாரடிகள் தெளிவாகக் குறித்துள்ளமை காணலாம்.

உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனும் அளவில்லாத பேரொளியினனும் ஆகிய இறைவன் ஆடல்புரிந்தருளும் ஞான நிலையமாகிய திருவளர் திருச்சிற்றம்பலம், அருமறைகளின் முதலிலும் நடுவிலும் கடையிலும் அன்பர்கள் சிந்தையிலும் விரிந்து விளங்கும் திருவளரும் ஒளியினாற் சூழப் பெற்றுத் தூய செம்பொன்னினால் {திருவைந்தெழுத்து) எழுதிவேய்ந்த சிறப்பினை உடையதாகும். இந்நுட்பத்தினை,

"அருமறை முதலில் நடுவினிற் கடையில் -
அன்பர்தம் சிந்தையில் அலர்ந்த
திருவளர் ஒளிசூழ் திருச் சிற்றம்பலம்."

(பெரிய - தடுத்தாட் - 104)

என வரும் தொடரில் சேக்கிழார் நாயனார் புலப்படுத்திய திறம் நினைந்து போற்றுதற்குரியதாகும்.