அணிந்துரை
அணிந்துரை
V
முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி
தமிழ் இணைப் பேராசிரியர்
அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) கும்பகோணம் 22.12.2007
இலக்கிய வரலாறு எழுதுவது என்பது அவ்வளவு எளிமையான செயல் அன்று. இந்த வரலாற்றை எழுதுவதற்கு மூல ஆதாரங்கள் கிடைக்காத 17 ஆம் நூற்றாண்டில் வெளிவந்த 'தமிழ் நாவலர் சரிதை'யும், பின்னர்த் தண்டபாணி சுவாமிகள் பாடிய ‘புலவர் புராணமும்’ முதன்மை நூல்களாக அமைந்தன. அதனைத் தொடர்ந்து சபாபதி நாவலரின் 'திராவிடப் பிரகாசிகை' (1899) என்னும் நூல் சிறந்த சில இலக்கியங்களின் இயல்புகளைத் தொகுத்து இயம்புகிறது. சுன்னாகம் குமாரசாமிப் பிள்ளை எழுதிய ‘புலவர் சரித்திரம்' புலவர் சிலரது வரலாற்றைச் சுட்டுகிறது. தஞ்சை சீனிவாச பிள்ளையின் 'தமிழ் வரலாறு (1921) முற்றுப் பெறவில்லை. இந்த நூலும் ஜி.எஸ். துரைசாமிப் பிள்ளையின் 'தமிழ் இலக்கியம்' என்ற நூலும் முதல் முயற்சி என்னும் வகையில் குறிப்பிடத் தக்கவையாகும்.
-
நம் தமிழ்மொழியின் சிறப்புக்களை அயல்நாட்டாரும் விளங்கிக் கொள்ளும் வகையில் முந்நீர்ப் பள்ளம் பூர்ண லிங்கம் பிள்ளை 'Tamil Literature' என்னும் பெயரிலும், வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் 'Studies in Tamil Literature and History' (1936) என்னும் பெயரிலும் ஆங்கிலத்தில் நூல்கள் எழுதினார்.