பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


இனி ஆவூர்க் கூற்றத்து ஆவூர் என்பது தற்காலத்தில் தஞ்சை ஜில்லா பாவநாசந் தாலுகாவிலுள்ளதும் சைவசமயா சாரியார்களால் பாடப் பெற்ற சிறப்புடையதும் பசுபதீச்சுரம் என்னும் திருக்கோயிலைத் தன்னகத்துக் கொண்டு விளங்குவதுமாகிய ஆவூரேயாகும். ஆவூர்க் கூற்றம் என்பது இவ்வாவூரைத் தலைநகராகக் கொண்டு இதனைச் சூழ்ந்திருந்த ஒரு சிறு நாடாகும். இரும்புதலை, விளத்தூர் முதலான ஊர்கள் இக்கூற்றத்திலிருந்தன என்று கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. எனவே, தஞ்சாவூர் ஜில்லா பாவநாசந் தாலுகா ஆவூரில் வாழ்ந்த தலைவனும் முதல் இராஜராஜசோழனது பணிமகனு மாகிய கண்ணன் ஆரூரன் என்பவனே செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள உக்கல் என்ற ஊரில் தன் அரசனாகிய இராஜராஜன் பெயரால் கிணறு தோண்டுவித்துத் தண்ணீர் இறைப்பார்க்கு நிபந்தம் விட்டவன் என்றுணர்க.

இக்கல்வெட்டில் காணப்படும் அருமொழி தேவன் மரக்கால் அரசாங்க முத்திரையிடப் பெற்ற மரக்கால் ஆகும். அருமொழி தேவன் என்பது முதல் இராஜராஜனுக்குரிய பெயர்களுள் ஒன்றாம். இவ்வேந்தன் காலத்திலிருந்த அரசாங்க மரக்காலுக்கு “இராச கேசரி” என்ற பெயர் வழங்கிற்று என்றும் இம்மன்னர் பெருமானால் எடுப்பிக்கப் பெற்ற தஞ்சை இராசராசேச்சுரம் திருக்கோயிலிலிருந்த மரக்காலுக்கு ஆடவல்லான் என்ற பெயர் வழங்கிற்று என்றும் கல்வெட்டுகளால் அறியப்படுகின்றன. இங்குக் குறிக்கப்பெற்ற அருமொழி தேவன், இராசகேசரி, ஆடவல்லான் என்ற மூன்று மரக்கால்களும் ஒரே அளவுள்ளவை என்பது ஈண்டு உணர்தற்குரியது.

நாள்தோறும் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பவனுக்கு நாள் ஒன்றுக்குக் கூலி இரண்டு மரக்கால் நெல்லும் கொடுக்கப்பட்டு வந்தது என்பது இக்கல்வெட்டால் புலப்படுகிறது. அன்றியும், திங்கள்தோறும் மட்பாண்டங்கள் இடுவோனுக்குத் திங்கள் ஒன்றுக்கு எட்டு மரக்கால் நெல் கூலியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இராஜராஜன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதம் நேருமாயின் அவற்றைப் புதுக்குவதற்கு ஆண்டு ஒன்றுக்கு இரு கலனே எட்டு மரக்கால் நெல் நிபந்தமாக வைக்கப்பட்டுள்ளது.