பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

99


வாழ்ந்து வந்தான். (Inscriptions of Pudukkottai State No. 18) அவன் பல்லவ மன்னர்களுக்குத் திறை செலுத்தி வந்த ஒரு குறுநில மன்னனாதலின், விடேல் விடுகு என்னும் பட்டம் அவனுக்கு அவ்வரசர்களால் வழங்கப்பெற்றுள்ளது. அன்றியும், விடேல் விடுகு விக்கிரமாதித்த சதுர்வேதி மங்கலம் என்னும் ஊர் ஒன்று, நந்திக் கலம்பகங்கொண்ட தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் காலத்தில் தொண்டை மண்டலத்தில் திருவல்லத்திற்கு அண்மையில் இருந்துள்ளது. (South Indian Inscriptions Vol. II No. 43) இவற்றை யெல்லாம் ஆராயுங்கால் பல்லவ மன்னர்கட்கு உரியனவாய் அக்காலத்தில் வழங்கிவந்த பட்டங்களுள் விடேல் விடுகு என்பதும் ஒன்று என்று எண்ண வேண்டியிருந்தது. அத்தொடர் மொழி உண்மையாக எதனையுணர்த்து கின்றது என்று அறிந்துகொள்ள இயலாமையின் அது பல்லவர்க்குரிய பட்டங்களுள் ஒன்று என்றே யானும் கருதியிருந்தேன்.[1] காஞ்சிமாநகரில் பரமேச்சுரவிண்ணகரத்தில் பொறிக்கப் பெற்றுள்ள ஒருகல்வெட்டை அண்மையில் யான் ஆராய்ந்து பார்க்க நேர்ந்த போது விடேல் விடுகு என்பது பல்லவ மன்னர்களது ஆணையைக் குறிக்கும் ஒரு தொடர்மொழி என்றுணர்ந்தேன். அக்கல்வெட்டில் காணப்படும் அப்பகுதி:

1. “மந்திரி மண்டலமும் மகாசாபிந்தரும் உபயகணத்த யாரும் கடகயாருகள் நந்திவன்மனென்று அபிஷேகஞ் செய்து தெர்க்கேய்ச் சத்திரிகரிவயும் சமுத்திரகோஷத்து (2) கட்வாங்கத்வஜமும் விருஷபலாஞ்சனமு மிறக..... டிகளாற் கூட்டி விடேல் விடுகென்னுந் திருவாணை நடாவி அபிஷேகஞ் செய்திருந்த இடம்“ (S.I.I. Vol. IV Ins. No. 135)* என்பதாம். அது பல்லவ மல்லன் என்று வழங்கப் படுவோனாகிய நந்திவர்மன் என்பான் தான் முடிசூடிய நாளில் பல்லவ அரசர்களுக்குரிய சமுத்திர கோஷம் என்னும் முரசத்தையும் கட்டுவாங்க துவசத்தையும் இடப முத்திரையையும் எய்தி, விடேல் விடுகு என்னும் ஆணையை நடாத்தினான் என்று கூறுகின்றது. ஈண்டுக் குறிக்கப் பெற்ற நந்திவர்மப் பல்லவமல்லன் என்பான் கி.பி. 717


  1. குறிப்பு :- இக்கல்வெட்டிற் காணப்படும் வடமொழி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களாக மாற்றி வரையப்பெற்றுள்ளன.