பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


இவ்வாறு மிக்க உயர்நிலையிலிருந்த தமிழிசை, கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் மீண்டும் வீழ்ச்சி எய்திக் கேட்பாரற்றுப் போயிற்று. அதற்குக் காரணம் அப்போது நிகழ்ந்த முகம்மதியர் படையெழுச்சியும் அதனால் நாட்டில் ஏற்பட்ட குழப்பமுமேயாம். பிறகு, விசயநகர வேந்தனாகிய குமார கம்பண்ணன் என்பான் தமிழகத்தின் மீது படையெடுத்து அதனைத் தன்னடிப்படுத்தினான். அக்கால முதல் விசயநகர வேந்தர்களின் பிரதிநிதிகள் தமிழ் நாட்டிலிருந்து கொண்டு ஆட்சிபுரிவாராயினர். அவர்களுள் சிலர் கன்னடத்தையும் மற்றையோர் தெலுங்கையும் தாய்மொழிகளாகக் கொண்டவர்கள். அவ்வரசப் பிரதிநிதிகளையும் பிறகு அரசாண்ட நாயக்க மன்னர்களையும் மகிழ்வித்தல் பொருட்டுத் தமிழகத்தில் கன்னடக் கீர்த்தனங்களும் தெலுங்குக் கீர்த்தனங்களும் பத்தியங்களும் பாடப்பட்டுவந்தன. தெலுங்கர்களோடு நட்புக் கொண்ட தமிழருள் சிலரும் அவற்றையே பாடி, சங்கீதத்தைப் பிறமொழி வாயிலாக வளர்த்து வருவாராயினர். அந்நிலை இவ்விருபதாம் நூற்றாண்டிலும் மாறாமலிருந்ததை யாவரும் அறிவர். எனவே பண்டைத் தமிழிசையும் மறைந்து போய் விட்டது.

இத்தகைய நிலையில் பேராசிரியர் உயர்திரு விபுலானந்த அடிகள், சிலப்பதிகாரம் முதலான பழைய தமிழ் நூல்களை நன்காராய்ந்து யாழ் நுல் என்ற ஓர் அரிய இசைத் தமிழ் நூல் இயற்றிக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மூலமாக வெளியிட்டிருப்பது தமிழ் மக்கள் யாவரும் போற்றற்குரிய பெருஞ் செயலாகும்.

இனி, நம் தாய் மொழியல்லாத பிற மொழிகளில் பாடப்படும் இசைப்பாடல்களெல்லாம் கேட்போரது காதைத் துளைக்கு மேயன்றி அவர்கள் உள்ளத்தைக் கவர்ந்து உணர்ச்சியை யுண்டு பண்ண மாட்டா என்பது பலரும் அறிந்ததோர் உண்மையாகும். பொருளுணர்ச்சிக் கிடமில்லாத பிறமொழிப் பாடல்கள் இசைவளம் பெற்றாலும் அம்மொழி யுணராத நம் நாட்டு மக்கள் உள்ளத்தை எங்ஙனம் கொள்ளை கொள்ள முடியும்? இதனை நன்குணர்ந்த அரசியல் பேரறிஞர் டாக்டர் ஸர்.