பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


அவ்வாசிரியர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டு இரண்டு வகைப்படும். ஒன்று, தம்பால் கல்வி பயின்ற சிறுவர்களுள் ஆர்வமும் நுண்மதியும் உடையவர்களுக்குத் தமிழ் இலக்கண இலக்கியங்களை ஊதியம் விரும்பாமல் இலவசமாகக் கற்பித்து இவ்விளைஞர்களைப் புலவர்களாகச் செய்தமை ஆகும். மற்றொன்று, தாம் வாழ்ந்து கொண்டிருந்த ஊர்களிலும் சார்ந்துள்ள பிற ஊர்களிலும் திருக்கோயில் கொண்டுள்ள இறைவன் மீது மாலை, அந்தாதி, கலம்பகம், உலா, பிள்ளைத் தமிழ், கோவை முதலான நூல்களும், தலபுராணங்களும் பாடி அரங்கேற்றி யாண்டும் தமிழ்மணம் கமழுமாறு செய்தமையாம்.

பாலாசிரியன்மார்களாகிய அப்புலவர் பெருமக்கள் ஊர்தோறும் நடத்திவந்த திண்ணைப் பள்ளிக்கூடங்களாகிய குரு குலங்களே அன்னியர் ஆட்சியில் தாழ்ந்த நிலையிலிருந்த நம் தாய்மொழியாகிய தமிழை இயன்றவரையில் காத்துவந்தன என்று சொல்லலாம். அவ்வாசிரியர்களுள் ஒருவரது குடும்ப நிகழ்ச்சி யொன்றை அடியிற் காணலாம்.

தமிழ்நாட்டின் வடபகுதியாகவுள்ள தொண்டை மண்டலத்தில் சித்தூர் மாவட்டத்தில் திருத்தணிகை என்னும் பேரூர் ஒன்று உளது. அது குன்றமெறிந்த குமரவேள் மலைமேல் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள தலம்; திருப்புகழ் ஆசிரியராகிய அருணகிரிநாதரால் பாடப்பெற்ற பெருமையுடையது. அது திருத்தணியல் என்று பழைய கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டிருப்பினும் இக்காலத்தில் திருத்தணி என்றே வழங்கப்படுகிறது. அவ்வூர், சென்னையிலிருந்து வடமேற்கே செல்லும் இருப்புப்பாதையில் அரக்கோணத்திற்கு வடக்கே எட்டுமைல் தூரத்தில் ஒரு புகைவண்டி நிலையமாக இருக்கின்றது. அதனைச் சூழ்ந்து கிழக்கே வடதிருவாலங்காடும், தெற்கே காஞ்சிமாநகரும், மேற்கே விரிஞ்சிபுரம் சோழசிங்கபுரம் என்ற ஊர்களும், வடக்கே திருப்பதி எனப்படும் திருவேங்கடமும் திருக்காளத்தியும் உள்ளன. இத்தலங்களுக்கு நடுவே முருகக் கடவுள் எழுந்தருளியுள்ள திருத்தணிகையைப் 'புவிக் குயிராகும் திருத்தணி' என்று அருணகிரியார் பாராட்டியிருத்தல் அறியத்தக்கது.