பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

193


அரசர்களால் ஆளப்பெற்று, இறுதியில் ஆங்கிலேயரது ஆட்சிக்கு உட்பட்டிருந்தமையால் இக்காலப் பகுதி அந்நியர் ஆட்சிக்காலம் எனக் கொள்ளப் பட்டது.

கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வில்லிபுத்தூராழ்வாரது பாரதம், வேதாந்த தேசிகரது தேசிகப் பிரபந்தம் என்ற நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.

கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அருணகிரி நாதருடைய திருப்புகழ், கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி என்ற நூல்களும் பிற்பகுதியில் காளமேகப் புலவரது திருவானைக்கா உலாவும் பாடப்பெற்றன எனலாம்.

கி.பி. பதினாறாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிய உலா, கோவை, கலம்பகம், பிள்ளைத் தமிழ் முதலான பிரபந்தங்களும் பல ஊர்களுக்குத் தலபுராணங்களும் மிகுதியாக இயற்றப் பெற்றிருத்தல் காணலாம். அவற்றுள் பல, இலக்கியச்சுவை அமைந்த சிறந்த நூல்கள் என்பதில் ஐயமில்லை.

கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களுள் செவ்வைச் சூடுவாரது பாகவதமும், மண்டல புருடரது சூடாமணி நிகண்டும், திருக்குருகைப் பெருமாள் கவிராயரது மாறனலங்காரமும், மறைஞான சம்பந்தரது சிவதருமோத்தரமும், நிரம்பவழகிய தேசிகரது சேது புராணமும், அதிவீரராம பாண்டியரது நைடதமும், வீரகவிராயரது அரிச்சந்திர புராணமும், வரதுங்க ராம பாண்டியரது கருவை அந்தாதிகளும், எல்லப்பநயினாருடைய அருணாசலப் புராணமும் திருவாரூர்க் கோவையும் குறிப்பிடத் தக்கனவாகும்.

கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களுள் குமரகுருபர சுவாமிகளின் நீதிநெறிவிளக்கமும், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் முதலான பிரபந்தங்களும், சிவப்பிரகாச சுவாமிகளின் நன்னெறியும் பிரபுலிங்க லீலையும், வெங்கைக் கோவை, வெங்கை யுலா முதலான பிரபந்தங்களும், அந்தகக் கவி வீரராகவ முதலியாருடைய திருவாரூர் உலா, கழுக்குன்றக் கோவைமுதலியனவும் சிறந்த நூல்களாகும்.