பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


இராசராச சோழன் உலா இரண்டாங்குலோத்துங்க சோழனுடைய மகன் இரண்டாம் இராசராச சோழன் மீது ஒட்டக்கூத்தர் தம் முதுமைப் பருவத்தில் பாடிய ஓர் அரிய உலா. இது மேலே கூறப்பட்ட இரண்டு உலாக்களிலும் அளவாலும் சுவையாலும் மிகுந்தது. இதிலும் இரண்டாம் இராசராச சோழனுடைய முன்னோர்களின் வரலாறுகள் சொல்லப் பட்டிருக்கின்றன. இது 782 அடிகளை உடையது. இதன் இறுதியில் ஒரு வெண்பா உளது.

தக்கயாகப் பரணி தக்கன் சிவபெருமானை அவமதித்துச் செய்த யாகத்தை வீரபத்திரக் கடவுள் அழித்து, அவனையும் அவனுக்கு உதவிபுரிந்த தேவர்களையும் வென்ற வரலாற்றைப் பொருளாகக் கொண்டு இயற்றிய பரணி நூலாகும். இவர், இதன் இறதி உறுப்பாகிய வாழ்த்து என்ற பகுதியில்இரண்டாம் இராசராச சோழனைத் தனியே வாழ்த்தியும், அவ்வேந்தனுடைய வீரச்செயல் முதலானவற்றை உவமை முகத்தாலும் வேறுவகையாலும் இந்நூலில் ஆங்காங்குப் பாராட்டியு மிருக்கிறார். ஒட்டக்கூத்தர் தம் வாழ்நாளில் இயற்றிய நூல்களில் இதுவே இறுதி நூலாக இருத்தலுங்கூடும். இது 814 தாழிசைகளையுடையது. இதற்குச் சிறந்த பழைய உரை ஒன்றுள்ளது. அவ்வுரையும் இவருடைய மாணவர் ஒருவர் எழுதியதாதல் வேண்டும் என்பதற்கு அதில் சான்றுகள் காணப்படுகின்றன.

காங்கேயன் நாலாயிரக் கோவை தம்மை இளமையில் வளர்த்து ஆதரித்த காங்கேயன் மீது ஒட்டக்கூத்தர் இயற்றிய நூல் என்பது சோழ மண்டல சதகத்தால் அறியப்படுகிறது. இக்காலத்தில இந்நூல் கிடைக்காமையால் இதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை.

இவையேயன்றி, ஈட்டியெழுபது என்னும் நூலையும் ஒட்டக் கூத்தர் பாடியதாகக் கூறிவருகின்றனர். ஆனால் அந்நூலைப் படித்துப் பார்க்குமிடத்து, அது கூத்தர் வாக்காகத் தோன்றவில்லை.