பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

215


அறிகுறியாகத் திருவாளர் என்பதை முதலில் எழுதத் தொடங்கி இதனை வழக்கத்திற் கொணர்ந்தனர். இங்ஙனம் எழுதும் முறை நம் தமிழகத்தில் யாண்டும் பரவி இதுபோது நிலைபே றெய்தியுள்ளது. இவ்வாறு முற்காலத்திலும் எழுதி வந்தனர் என்பது ஒரு பழைய கல்வெட்டால் புலப்படுகின்றது. அஃது அடியில் வருமாறு:-

(1) ஸ்வஸ்திஸ்ரீ கோமாற வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் சோணாடுகொண்டு அருளிய சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு உ - ஆவது தென் கோணாட்டுக் குன்று சூழ் நாட்டுச் சிகாநல்லூர் திருவாளன் சோழ மூவேந்தவேளானும் திருவுடை (2) யான் கோதண்டனும் சுந்தன் கொழுந்தும் சுந்தன் கணியும் நம்பி கொழுந்தும் நம்பி பன்மனும் பொன்னன் ஒன்றாயிரமுடையானும் இவ்வனைவோம் எங்கள் கீழைப் புன்செய் விலைக்குற விற்கக் கொள்விருளிரோ வென்று ஒரு காலாதும் இருகாலா(3) வதும் முக்காலாவது முற்கூறப் பிற்கூறி சோழபாண்டிய வளநாட்டு ஆற்றூருடையான் நம்பி பொன்னம்பலக் கூத்தனான உடையார் காங்கேயராயர் கொள்வேனென்று அருளிச்செய்ய முன்சொல்லப்பட்ட இவ்வனைவரோம் நாங்கள் விற்கிற பு (4)ன் செய்க்குப் பெருநான் கெல்லை யாவன கீழ்பாற் கெல்லை மேல்மண நல்லூர் ஊர்ப்பொது எல்லைக்கும் மேற்கும் தென்பாற் கெல்லை திருவாளன் சோழ மூவேந்த வேளான் செய்க்கு வடக்கும் மேற்பாற் கெல்லை சுந்தன் கொழுந்து நம்பி கொழுந்(5)து திருவன் சோழமூவேந்த வேளான் இவர்கள் செய்க்குக்கிழக்கும் வடபாற்கெல்லை பொன்னன் ஒன்றாயிரமுடையான் சுந்தன் கொழுந்து நம்பிகொழுந்து இவர்கள் புன்செய்க்கு தெற்கும் ஆக இசைந்த பெருநான்கெல் (6) லைக்கு உட்பட்ட புன்செய்விற்றுக் கொடுத்து எம்மில் இசைந்த விலைப் பொருள் அன்றாடு நற்பழங்காசு இப்பழங்காசு இரண்டரையும் ஆவணக்களத்தே காட்டேற்றி கைச்செலவறக் கொண்டு விலைப் பிரமாணம் பண்ணிக் கொடுத்தோம் (7) உடையார்காங்கேயராயர்


1. செந்தமிழ்த்தொகுதி 33 பக்கம் 63.

2. தமிழ்ப பொழில் துணர் மூன்றில் யான் எழுதியுள்ள 'சுந்தரமூர்த்திகளது காலம்' என்ற கட்டுரையைப் பார்க்க.