பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


5


பின்னர், சதானந்தம் பிள்ளையும் மாசிலாமணி முதலியாரும் நாற்காலியில் வந்து உட்கார்ந்தனர். அப்போதும் பிள்ளையவர்களின் செவிகளில் மங்கையர்க்கரசியின் மொழிகள் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தன; ஆதலால், அக்குரல் இனிமையிலேயே மனத்தை லயிக்க விட்டு மெளனமாயிருந்தார்.


மாசிலாமணி முதலியார் பிள்ளையவர்களின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். எப்போதும் ஏதேனும் ‘தொன தொண’ வென்று பேசிக் கொண்டிருக்கும் இயற்கையுடைய அவருக்கு இம்மெளன நிலையை நீண்ட நேரம் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. ஆகவே அவர் பிள்ளையவர்களை நோக்கி, மெல்லப் பேச்சுக் கொடுக்கத் தொடங்கி, “என்ன அண்ணா, இருந்தாற் போலிருந்து தக்ஷிணாமூர்த்தி கோலம் கொண்டு விட்டீர்கள். பக்தனொருவன் நான் காத்துச் கிடக்கிறேன், தங்களின் கருணா கடாட்சத்துக்கு திருவாய் மலர்ந்து அருளுங்கள். சொல்லாமல் சொல்லும் தங்கள் மெளன நிலையை அடியேனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை” என்றார் நகைத்தவாறே.


முதலியாருடைய நையாண்டிப் பேச்சு பிள்ளையவர்களை விழிப்புற வைத்தது. “ஏதோ யோசனை யுண்டாயிற்று. அதிலேயே ஆழ்ந்து விட்டேன், முதலியார்வாள்! வேறொன்றுமில்லை” என மங்கையர்க்கரசியின் பேச்சு நினைவிலிருந்து விடுபட முயன்றவாறே கூறினார்.


“என்ன யோசனையோ?” என்று முதலியார் கேட்கப் போகும் சமயத்தில், பிள்ளையவர்கள், “அத்துடன் இன்றெல்லாம், கோனார் விவகாரத்தைப் பற்றியே எங்கும் யாருடனும் பேச வேண்டியதாய் விட்டது. எங்கோ எவனோ ஏதோ செய்துவிட்டுப் போக, அதற்கெல்லாம் நாம் கண்டவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.