பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தும்பைப் பூ

சதானந்தம் பிள்ளை, “உனக்கு இதெல்லாம் என்ன வேடிக்கை? சிவா! படிப்புண்டு; வீடுண்டு என்று போவதை விட்டு” என்று அன்பாகக் கடிந்து கொண்டார்.


சிவகுமாரன் அதற்கு ஏதோ சமாதானம் சொல்ல முயன்றான்.


இச்சமயத்தில் உள்ளறையிலிருந்து “சிவா, சித்தி கூப்பிடுகிறாள், பார்! புத்தகங்களை வைத்து விட்டு முகம் கால் கழுவிக் கொண்டு, காபி சாப்பிடப் போ” என்று திலகவதி கூப்பிட்டாள்.


“சரி, சரி போ! இனிமேல் இந்தமாதிரி அக்கப்போருக்கு எல்லாம் போகாதே! உன் படிப்பு முடிகிற வரை......” என்று சதானந்தம் பிள்ளை சொல்லிக் கொண்டிருக்கையில் சிவகுமாரன் தலையைக் குனிந்து கொண்டே உள்ளே போகலானான்.


அவன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மங்கையர்க்கரசி, உணவு அருந்தும் மேஜை முன் சிவகுமாரன் வந்து உட்கார்ந்ததும், சிற்றுண்டியை அவனுக்குப் பரிவாகப் பரிமாறிக் கொண்டே, “வா சிவா! இன்று என்ன இவ்வளவு நேரம்?...இதுவரை ஒன்றும் சாப்பிடாமல் இருந்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும்?” என்று விஷயம் தெரியாதவள் போல் கேட்டாள்.


சிவகுமாரன் சிற்றுண்டியை வாயில் எடுத்துப் போட்டுக் கொண்டே ஏதோ யோசனையில் இருந்ததால் மங்கைக்குப் பதில் எதுவும் சொல்லவில்லை.


“என்ன? சிவா, எதுவும் சொல்லாமல் இருக்கிறாய்? என் மேல் ஏதாயினும் கோபமா?” எனறு கலைந்துமுன் விழுந்திருந்த அவனுடைய கிராப்பை நீவி விட்டுக் கொண்டே கேட்டாள் மங்கை.


“காபி கொண்டு வா, சித்தி” என்றான் சிவகுமாரன் வேறெதுவும் சொல்லாமல்.