மொழியறியா ஆசையெலாம் முகச்சுளிவில் கண்டாயே
பேச்சுக்கும் எட்டாத பேரன்பைத் தெரிந்தாயே
கண்டதெலாம் இன்று கனிந்துரைக்க மாட்டாயோ?
நினைவெல்லாம் அங்குசென்று நீ மொழியக் கூடாதோ?
ஏழையிந்தப் பேதைநெஞ்சம்
இன்றும் அன்று போலவேதான்
வெம்பித் துடிப்பதை நீ விளம்பிவிட்டா லாகாதோ?
இருளுக்கு எழில் கொடுக்க இன்பமுடன் வந்தாயே
பிரிவுத் துயர் களையப் பேசிவிட்டா லாகாதோ?
இளமைக் கொதிப்பெல்லாம் என்னைக் குலுக்குதிங்கே
நெஞ்சத்தினில் துடிப்பு நின்றிருக்கும் எல்லைவரை
கொஞ்சமுமே குறையாது கூடிப் பெருகிவரும் -
என்னை யறிந்தோனொருவன் இருக்கின்றான் என்பதனால்
வாழ்கின்றேன் இந்த வாசகமும் பொய்யாமோ?
நீயிந்தப்பேச்செல்லாம் நிச்சயமாய்ச் சொல்லிடுவாய்
அன்று மிருந்தாய் நீ அறிவாய் நீ எல்லாமும்
உள்ளத் துணர்ச்சியெல்லாம் உள்ளபடி கூறிவிடு
அதன் பின்னர் எப்படியோ ஆனபடி ஆகட்டும்.
75