பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

வீரர் குலம் விளங்கவந்த திருவிளக்கு

"சித்தார்த்தா, இந்தத் தாராவை தேவதத்தன் வாங்கிக் கொண்டுவரச் சொன்னான்” என்றான் அந்தச் சிறுவன்.

“தேவதத்தனா? அவன் எதற்கு வாங்கி வரச் சொன்னான்?” என்று கேட்டான் சித்தார்த்தன்.

"தேவதத்தன் தான் அம்பெய்து இந்தப் பறவையை வீழ்த்தினான். அது அவனைச் சேர வேண்டியதுதானே" என்று நியாயம் பேசினான் அந்தச் சிறுவன்.

“தேவதத்தன் அம்பு எய்து இதைக் கொல்லப் பார்த்தான். நான் காயத்துக்குக் கட்டுப்போட்டு இதைக் காப்பாற்றிவிட்டேன். நெஞ்சில் கைவைத்துச் சொல். இது யாருக்குச் சொந்தம்? கொல்ல முயன்றவனுக்கா? காப்பாற்றியவனுக்கா?", என்று சித்தார்த்தன் கேட்டான்.

“காப்பாற்றியவனுக்குத்தான் சொந்தம்!" என்று கூட இருந்த சிறுவர்கள் சித்தார்த்தனோடு சேர்ந்துகொண்டு பேசினார்கள்.