பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

வீரர் குலம் விளங்கவந்த திருவிளக்கு

காற்றின் கொடுமையை அகற்றிக் கொண்டிருந்தன.

ஆண்டின் மூன்று பருவங்களிலும் சித்தார்த்தன் இந்த மாளிகைகளில் மாறிமாறி இருந்துவந்தான். மூன்று மாளிகைகளும் எடுப்பான பார்வையும், சுற்றிச் சூழ்ந்த அழகான பூங்காக்களும் அமைந்து இன்ப உலகங்களாகக் காட்சியளித்தன.

உரிய பருவத்தில் சித்தார்த்தனுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டார் சுத்தோதனர். சித்தார்த்தனுக்குத் தகுந்த பெண்ணைத் தேடி அவர் அலைந்துகொண்டிருக்க நேரவில்லை. அவனுக்குப் பொருத்தமான பெண் அருகிலேயே இருந்தாள். முறைப் பெண்ணாக இருந்த இளவரசி யசோதரை அழகியாக இருந்ததுடன் அரசர் நினைத்தபடி சித்தார்த்தனை வைத்துக் கொள்ளக்கூடிய நற்குணவதியாகவுமிருந்தாள். மென்மையான அவளுடைய நல்லியல்புகளும், அமைதியாகவும் பொறுமையாகவும், அடக்கமாகவும் இருக்கும் குணச் சிறப்பும் பொருந்தியவளாக இருந்த அவளைச் சித்தார்த்தனுக்கு மணமுடித்து வைத்தார் மன்னர்.