பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

உண்மை தேடிப் புறப்பட்ட ஒளிமாணிக்கம்

வழிநெடுகிலும், எதிர்பாராது இளவரசனைக் கண்ட மக்கள் கைகுவித்து வணங்கினர்; வாழ்த்து மொழிகள் கூறினர். சிரித்துக் கை தட்டி ஆரவாரம் செய்தனர். ஜெய ஜெய முழக்கம் எழுப்பினர். எல்லாம் இன்பமாகவேயிருந்தது. அன்போடு சிரித்து வரவேற்கும் குடிமக்களைக் கண்டபோது, சித்தார்த்தனுக்கும் மனத்துக்குள் இன்பம் நிறைந்தது.

ஆனால், அந்த இன்பம் நிலைக்கவில்லை. ஐந்தாறு வீதிகளைக் கடந்து மேலும் தேர் ஓடிக் கொண்டிருந்தபோது தள்ளாடித் தள்ளாடி நடந்து செல்லும் ஒரு கிழவனைக் கண்டான் சித்தார்த்தன்.

வாடி மெலிந்த உடலும், வதங்கிச் சுருங்கிய வயிறும், கூனல் விழுந்த முதுகும், குச்சி போன்ற கைகால்களும், குழிவிழுந்தகண்களும், நரைத்துப்போன தலைமயிரும், திரை விழுந்த நெற்றியுமாக அந்தக் கிழவன் ஒரு கம்பைப் பிடித்துக் கொண்டு தள்ளாடித் தள்ளாடி. நடந்து சென்று கொண்டிருந்தான். வழியில் போவோர் வருவோரைப் பிச்சை கேட்டு நீட்டிய அவன் கை நடுநடுங்கிக் கொண்டிருந்தது.